கட்டுரை, கல்வி, மொழி 5 நிமிட வாசிப்பு

உயர்கல்வியின் தமிழ்: செய்ய வேண்டியது என்ன?

அ.ராமசாமி
14 Nov 2022, 5:00 am
0

ரண்டு மாதங்களுக்கு முன்பு “பொதுப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் அனைத்துக்கும் இரண்டு ஆண்டுகளிலும் எந்தவித வேறுபாடுமின்றித் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று தமிழக அரசு அறிவித்தது. இப்போது தொழிற்கல்விப் படிப்புகளான “பொறியியல் பட்டங்களுக்கும் தமிழ் இரண்டு ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்” என்ற அறிவிப்பு வந்துள்ளது. உயர்கல்வியில் தமிழின் இடம் பெரிய கேள்விக்குறியாக இருந்ததை இந்த அறிவிப்பு மாற்றி அமைக்கலாம். அந்த அளவில் வரவேற்புக்குரிய அறிவிப்பு இது. அதேசமயம், இது எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது என்பதும் முக்கியம். 

இன்றைய தேவைக்கான மொழியாகத் தமிழை மாற்றுவதற்குப் பல்கலைக்கழக அளவில் செய்யக்கூடிய மாற்றங்கள் மொழிப் பாடத்திலேயே செய்யப்பட வேண்டும். தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பிக்க வேண்டும். இப்போதுள்ள பாடத்திட்டங்களில் அந்த நோக்கம் இல்லை.

நெல்லையில் நேர்ந்த அனுபவம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2014இல் ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ‘பட்டப்படிப்புகளின் தமிழ் மொழிப்பாடத்துக்கான தாள் ஒன்றை எப்படி பயன்பாட்டு நோக்கில் வடிவமைக்கலாம்?’ இதற்கான மாதிரியை உருவாக்குவதே பயிலரங்கின் நோக்கம். பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினரையும் அழைத்திருந்தோம்.

விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைக் கோப்பை உயர்கல்வி வாரியத்திற்கு அனுப்பிவைத்தோம். இந்தப் பயிலரங்குக்கு நிதியுதவி அளித்த அமைப்பு அதுதான். ஆனால், அந்தக் கோப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை; மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்

தங்க.ஜெயராமன் 03 Feb 2022

இருக்கும் நிலைமைகள்

இப்போது நம்முடைய பட்டப்படிப்புகளில் உள்ள ‘மொழிப்பாடம்- பகுதி ஒன்று (தமிழ்)’ பொதுவாக இரண்டு விதமான நிலையில், இரண்டு விதமான அளவில் கற்பிக்கப்படுகின்றது. அதாவது, மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அறிவியல், சமூக அறிவியல், கலையியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு நான்கு பருவங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதேநேரம், கணினி அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை, சிறப்புக் கணிதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பட்ட வகுப்புகளுக்கு இரண்டு பருவத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. ஏனென்றால், அவை தொழிற்வாய்ப்புப் படிப்புகள் என வகைப்படுத்தப்பட்டு மொழிப்பாடங்கள் முக்கியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. முக்கியமில்லாத மொழிப்பாடமாகத் தமிழ் மட்டுமே உள்ளது; ஆங்கிலம் அப்படி ஆக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

பொறியியல் படிப்புகளுக்கும் அதேபோல் தமிழகக் கல்லூரிகளில் ஆங்கிலம் முதல் வருடத்தில் ஒரு பாடமாக – பொறியியல் ஆங்கிலமாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்மொழி எந்தப் பாடமாகவும் இல்லை. மருத்துவக் கல்வியில் மொழிப்பாடங்களே இல்லை. 

உள்ளடக்கங்கள் மாற வேண்டும்

பொதுவாக, பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பாடங்கள் இரண்டு நிலையில் உள்ளன. பட்டப்படிப்புகளுக்குப் பகுதி ஒன்றைத் தவிர, இளநிலைத் தமிழ் இலக்கியப் படிப்பிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இவ்விரண்டு படிப்புகளுக்கும் தயாரிக்கப்படும் தாள்களின் அமைப்பும் உள்ளடக்கமும் வேறுபாடு இல்லாமல் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. முதன்மைப் பாடமாகப் படிக்கும் தமிழுக்கும், பகுதி ஒன்று பாடமாகப் படிக்கும் தமிழுக்கும் ஒரே நோக்கம் ஏற்க முடியாத ஒன்று. இதனை மாற்றுவது அவசியமானது.  

வெறுமனே இலக்கிய அறிமுகம், ரசனை உருவாக்கம் என்பதாக இப்போதுள்ள மாதிரி இல்லாமல், மாணவர்களிடம் மொழி வளத்தை உருவாக்கவும், அவர்களுடைய துறை சார்ந்த பயன்பாட்டில் பயன்படுத்தவுமான வகையில் தமிழ் கற்பித்தல் அமைய வேண்டும். இலக்கியப் பகுதிகளைக் குறைத்துக்கொண்டு மொழிக்கூறுகளை அதிகப்படுத்தித் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்பிக்க வேண்டும். அதோடு அவர்கள் துறை சார்ந்த எடுத்துரைப்புகளைப் பேச்சு வழியாகவும் எழுத்து வழியாகவும் நிகழ்த்தவும் தூண்டும் விதமாகப் பாடத்திட்டத்தை மாற்றியாக வேண்டும்.

மாற்றங்கள் செய்வது எப்படி?

இதுவரையிலான தமிழ்ப் பாடத்திட்டங்களைப் பெரும்பாலும் தமிழ்ப் பேராசிரியர்களே உருவாக்கிவந்துள்ளனர். அதன் காரணமாகத் தமிழ் ஆசிரியர்களின் எல்லைக்குள் இருக்கும் இலக்கிய ரசனை, பண்பாட்டுப் பெருமிதம் போன்றவற்றைக் கற்பிப்பது போதும் என்ற நிலையே பாடத்திட்ட உருவாக்கத்தில் இருக்கிறது. தமிழை முதன்மைப் பாடமாகப் படித்த தங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக நினைக்கிறார்கள். அத்தோடு அவர்களின் எல்லைக்குள் மொழிப் பயன்பாடு இருப்பதாக நம்பிக்கொண்டு மரபான கற்பித்தல் முறைகளையே பின்பற்றுகின்றனர். இந்த எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும். மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மொழிப் பாடங்களின் முக்கியத்துவம்

தங்க.ஜெயராமன் 15 Jun 2022

நவீன அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்குப் பின்னால் மொழிப் பயன்பாடு, மொழி ஆசிரியர்களின் கையைவிட்டு நழுவி அந்தந்தத் துறைகளின் ஆசிரியர்களிடமும், துறைசார் வல்லுநர்களிடமும் சென்றுவிட்டது. இதற்கேற்ப பாடத்திட்டக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். வெகுமக்கள் தளத்தில் மேலாண்மையியல், ஊடகவியல், கணினி அறிவியல், மருத்துவம் போன்றவற்றைத் தமிழில் பேசும் / எழுதும் துறை வல்லுநர்கள் இப்போது அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற துறைகளிலும் தேடினால் கிடைக்கக்கூடும். அவர்களைப் பெரும்பான்மையானவர்களாகவும் மொழித் துறையினரைச் சிறுபான்மை எண்ணிக்கையிலும் கொண்ட பாடத் திட்டக்குழுக்களை உருவாக்குவதின் வழியாகத் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்கும் நோக்கத்தை உருவாக்க வேண்டும்.

மேலும், ஒரு சில பாடத்திட்டங்கள் என்பதற்குப் பதிலாகச் சில பத்து மொழிப்பாடத் தாள்களை உருவாக்க வேண்டும். என்னைக் கேட்டால் இப்போது இருப்பதுபோல், ‘தாள் ஒன்று’ என்பது பொதுவான தாளாக இருக்கக் கூடாது என்றே சொல்வேன். சில பொதுக்கூறுகளோடு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான பாடங்கள் உருவாக்கப்படலாம். பொதுவான கேள்வித்தாள் என்ற முறையை மாற்றிப் பொதுவான எழுத்துத் தேர்வோடு ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான செய்முறை மற்றும் வாய்மொழித் தேர்வுகளைச் சோதனை செய்ய வேண்டும். தீவிரமான மாற்றங்கள் வழியாகவே தமிழை அனைத்துத் துறைகளுக்குமான மொழியாக மாற்ற முடியும். அப்படிச் செய்யாமல் எல்லாப் பட்டப்படிப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்
மொழிப் பாடங்களின் முக்கியத்துவம்
ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?
தாய்மொழியை எப்படிக் காத்தது ஃபின்லாந்து?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அ.ராமசாமி

அ.ராமசாமி, கல்வியாளர். இலக்கிய விமர்சகர். தொடர்புக்கு: ramasamytamil@gmail.com


4






புதிய தாராளமயக் கொள்கைமனவலிமைநவீன சிந்தனைகள்பாத பாதிப்பு காலநிலை மாற்றம்வேளாண்மைக்கு வருபவர்களை ‘டிஸ்கரேஜ்’ செய்வேன்: பாமயஐந்து மாநில தேர்தல்ஐரோப்பாகாவிரி பிராந்தியம்மோடியின் உள்நோக்கங்கள்பிங்க் சிட்டி ஜாதியும்அதிகார வலிமைகல்வியும் வாழ்வியலும்சமஸ் - எஸ்.என்.நாகராஜன்உலகிலேயே பரிதாபமானவன் ராமன்: சாரு பேட்டிசாவர்க்கர் அருஞ்சொல்அண்ணா இந்தி அருஞ்சொல்பன்னாட்டுக் கல்விக் கூட்டாண்மைதூக்கம்துயரப் பிராந்தியம்பிரபாகரன்ஒன்றிய நிதிநிலை அறிக்கைமாஸ்ஏ.கே.பட்டாசார்யா கட்டுரைகோவிட் நோய் வரிவி.ரமணிபோக்குவரத்துத் துறைதோசை!புரதப் பவுடர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!