கட்டுரை, தொடர், வரலாறு, சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

ருவாண்டா: கல்லறையின் மீதொரு தேசம்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
01 Oct 2023, 5:00 am
0

பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கிய ‘ஹைதர்’ (2014) திரைப்படம் ஒரு முக்கியமான ஆக்கம். ஷேக்ஸ்பியரின், ‘ஹேம்லெட்’ (Hamlet) என்னும் படைப்பின் பின்புலத்தில், காஷ்மீர் பிரச்சினையைப் பேசும் படம். காஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் முக்கியமான திரைப்படம். படத்தில் காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப்பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடல் ஒன்றைப் பாடத் துவங்குகிறாள். பல நாட்கள் மனத்தை அதிர வைத்த காட்சி அது.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அதேபோல ஒரு காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.

காணததைக் கண்டேன்!

‘அமைதி’ என்று பெயரிடப்பட்டிருந்த கட்டிடத்தின் முதல் மாடியின் அந்த அறையின் கதவைச் சத்தமின்றித் திறந்ததும், என்னைத் தாக்கியது அந்த மென்சோகப் பாடல். ஜன்னலோரத் திண்ணையில் அமர்ந்து, காதில் இயர் ஃபோனைக் பொருத்திக்கொண்டிருந்த ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் நீர் வழிந்து கோடிட்டிருந்தது. 

அறையைச் சுற்றி நோக்கினேன். இன்னொரு ஜன்னலின் திண்ணையில் ஒரு இளைஞன் கண்களை மூடிப் பிரார்த்தனையில் இருந்தான். கைகளில் ஜபமாலை போல ஒன்று. காதுகள் அந்தப் பெண்ணையே நோக்கியிருக்க, எதிர் ஜன்னலின் அருகில் சென்று வெளியே நோக்கினேன். பஞ்சுக் குவியலின் மென் தூவலென வெளியே மழை துவங்கியது. கைபேசியின் படப் பெட்டியில் ஒரு புகைப்படம் எடுக்கலாம் என குவி நோக்கித் திரையை அழுத்தினேன். அதிலிருந்து வெளிப்பட்ட சப்தம் பெரிதாக ஒலித்து, அறையின் அமைதியைக் குலைத்தது.  மூடி வைத்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். சிறிது நேரம் அமைதியாக இருக்க முயன்றேன்.

கீழ்த்தளத்தில் கண்ட காட்சிகளும், தகவல்களும் குமிழியிட்டு மேலெழுந்து வந்துகொண்டேயிருந்தன. குமட்டியது. எழுந்துவிட்டேன்.  கீழிறங்கி வந்து வரவேற்பறையில் நின்று மழையைக் கவனிக்கத் துவங்கினேன். அந்த இடம் ருவாண்டா நாட்டின் இன அழிப்பு அருங்காட்சியகம்.

ருவாண்டா இன அழிப்பு அருங்காட்சியகம்

ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு, ஹூட்டுக்கள் எனப்படும் பெரும்பான்மை மக்களுக்கும், டூட்ஸிகள் எனப்படும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான டூட்ஸி சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில், கிட்டத்தட்ட 2.5 லட்சம் உடல்களின் மிச்சங்கள் ருவாண்டா தலைநகர் கிகாலியில் புதைக்கப்பட்டு, அதன் மீது இந்த இன அழிப்பு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி, இன அழிப்பு நாளாகக் கருதப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ருவாண்டா ஒரு அழகிய ஆப்பிரிக்க தேசம். மலையும் மலை சார்ந்த நிலமும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கும் மேல் உயரத்தில் உள்ளதால், எப்போதும் மென்குளிர். காதலியின் அண்மை போல. விமானத்தில் இருந்து இறங்கியதும், நம்மை முதலில் கவர்வது – சுத்தமான சாலைகள்.  என்னை அழைத்துப் போக வந்திருந்த நண்பர் சொன்னார் – மாதத்தின் இறுதிச் சனியன்று, காலையில், துப்புரவுப் பணியாளர்களும், மக்களும் வெளியில் வந்து சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அரசின் ஆணை என்று.  மக்கள் வருவதில்லை. ஆனால் வீடுகளிலும், கடைகளிலும் வேலை செய்யும் பணியாளர்கள் பொது இடங்களைச் சுத்தம் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.  வீடுகளின், மரங்களும் பூச்செடிகளும் சரியாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறதா என உள்ளூர் கவுன்சிலர் கவனிக்கிறார். அன்று தேதி இரண்டு. எனவே அதி சுத்தம்.

மக்கள் தலைவர்

ருவாண்டாவுக்குத் தொழில் நிமித்தமாகச் செல்லும் முன்பு, அதுபற்றி எனது சகாவுடன் பேசி, ருவாண்டா பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொள்ள முயன்றேன். ருவாண்டா ஆப்பிரிக்காவின் மிக நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும் தேசம் எனச் சொன்னார். நாங்கள் எங்களது நிறுவனம் துவங்க முற்பட்டபோது, விண்ணப்பம் அளித்த நான்காம் நாள் துவங்க அனுமதி கிடைத்தது ஏன்றார். வியந்து போனேன்.

மொத்த ஆப்பிரிக்க கண்டத்தில் ருவாண்டா, கானா என்னும் இரு நாடுகள்தாம் மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுபவை. மிகக் குறைந்த ஊழல். இதற்கு முழுக் காரணமும் பால் ககாமேவைச் (Paul Kagame) சாரும். இனக்குழுச் சண்டைகள் நடந்து அது இன அழிப்பாக மாறியபோது, ருவாண்டாவை வென்று, ஆட்சியில் அமர்ந்து, மிகச் சிறப்பாக ஆட்சிசெய்கிறார். மாலை மயங்கும் முன், தெருவில் ஆயுதம் தாங்கிய காவல் துறையினரும், ராணுவமும் நிற்கும். எனவே, இரவில் பயமின்றி நடமாடலாம் என்று அறிந்துகொண்டேன். அத்தனையும் உண்மை என்பதை அங்கே இருந்த 3 நாட்களிலும் பார்க்க முடிந்தது. 

பால் ககாமே (Paul Kagame), ருவாண்டா நாட்டின் தலைவர்.

அன்றைக்குச் சில மாதங்கள் முன்புதான், நாட்டின் தலைவர் பால் ககாமே ஒரு மக்கள் கணிப்பை வென்றிருந்தார். ஒருவர் ஒரு நாட்டின் தலைவராக இரண்டு முறைகள்தான் இருக்க முடியும் என்னும் விதியைத் தளர்த்தி, அதை ஐந்தாக ஆகிக்கொள்ள மக்களின் அனுமதி கேட்டிருந்தார். 98% மக்கள் அதைச் சரியென்றிருந்தார்கள். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில், இது இப்போது ஒரு மோஸ்தராக மாறிக்கொண்டிருக்கிறது.

உகாண்டாவின் முஸூவேணி, ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே, ருவாண்டாவின் பால் ககாமே என அனவரும் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டு விலக மறுக்கிறார்கள்.  நண்பரிடம், “இது என்ன புதிதாய் துவங்கியிருக்கும் கிழக்கு ஆப்பிரிக்க வியாதியா?” என்றேன். அதை அவர் ரசிக்கவில்லை. “மற்ற நாடுகள் எப்படியோ, ருவாண்டாவுக்கு பால் ககாமே இன்னும் 10-15 ஆண்டுகள் தேவை. அந்த அளவுக்கு, இந்தச் சமூகத்தில் இன அழிப்பின் கொடுமைகள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன” என்றார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ருவாண்டாவின் பின்னணி

மொத்தம் 26 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் (தமிழகத்தில் கால்வாசி) பரப்பளவு கொண்ட குட்டி நாடு ருவாண்டா. இதன் மக்கள் பல்வேறு பழங்குடிக் குழுக்களைச் சார்ந்தவர்கள். ஆதியில் வந்தவர்கள் ‘ட்வா’ என்னும் குள்ளமான மனிதர்கள். இவர்கள் வேட்டையாடி உண்னும் குழுக்கள். பின்னர் வந்தவர்கள் இன்று பெரும்பான்மை மக்கள் என அறியப்படும் ஹூட்டு பிரிவைச் சார்ந்தவர்கள். டூட்ஸிகள் எனப்படும் சிறுபான்மையினர் இறுதியில் வந்தார்கள் என ஒரு கருத்தும், ஹூட்டுகளும் டூட்ஸிகளும் வேறு வேறு இனமல்ல.  டூட்ஸிகள் மாடு மேய்ப்பவர்கள், ஹூட்டுகள் வேளாண்மை செய்பவர்கள். எனவே, இது இனப் பாகுபாடு அல்ல, பொருளாதாரப் (தொழில்) பாகுபாடு என்றும் சொல்கிறார்கள். 

பல முறைகள் கலந்தும் முயங்கியும். இந்த நாட்டு மக்களினம், முதலில் குழுக்களாகப் பிரிந்தன. பின்னர் 1700களில் எட்டு அரசுகளாக உருவாகின. அதில் ஓர் அரசான டூட்ஸி ந்யிகின்யாவின் ஆட்சியில் தனிப் பெரும் அரசாக உருவெடுத்தது. அதன் முக்கிய மன்னனான கிகேலி ர்வாபுகிரி (Kigeli Rwabugiri) பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அதில் ஆயர் குடியினரான டூட்ஸி மக்கள் சமூகத்தின் மேற்படியில் அமரத் தொடங்கினர். ஹூட்டுக்கள் டூட்ஸி குழுத் தலைவர்களுக்கு வேலை செய்யத் தொடங்கினர்.  டூட்ஸிக்களுக்கும், ஹூட்டுகளுக்கும், சமூகப் பொருளாதார, அரசதிகாரப் பிரிவினைகள் துவங்கின.

இதில் 1884 பெர்லின் மாநாட்டின் வழியாக, ருவாண்டா ஜெர்மனிக்கு அளிக்கப்பட்டது. ஜெர்மனி, உள்ளூர் அரசர் வழியாக ருவாண்டாவை ஆண்டுவந்தனர். முதலாம் உலகப் போருக்குப் பின், ருவாண்டா பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஜெர்மனியைப் போல் இல்லாமல், பெல்ஜியம் நேரடியான நிர்வாகத்தில் ஈடுபட்டது.  ருவாண்டாவை நவீனப்படுத்தும் முயற்சிகள் துவங்கின. அதில் ஓர் அங்கமாக, நிலச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, நிலம் தனியார்மயம் ஆக்கப்பட்டது. இந்தச் சீர்திருத்தத்தில், பொருளாதாரத்தின் மேற்படியில் இருந்த டூட்ஸிகள் பயனுற்றார்கள்.  ஹூட்டுக்கள் தம் நிலங்களை குறைந்த இழப்பீட்டுத் தொகைக்கு இழந்து, டூட்ஸிகளின் கீழ் நிலமற்ற வேளாண் கூலிகள் ஆனார்கள். பெல்ஜியம் அடுத்து செய்த (சீர்?)திருத்தம்தான் ஒரு பேரழிவை அறிவியல்பூர்வமாகச் செய்ய உதவியாக இருந்தது.

மக்களை ஹூட்டு, டூட்ஸி, ட்வா மற்றும் குடியேறிகள் எனப் பிரித்து அடையாள அட்டை கொடுத்தார்கள். இந்த அட்டை கொடுக்கப்படும்போது, 10 மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர் டூட்ஸி எனவும், அதற்கும் கீழுள்ளவர் ஹூட்டு எனவும் பிரிக்கப்பட்டதாக ருவாண்டா அரசின் இன அழிப்பு அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது. அதன் பின், மக்கள் பிறப்பின் அடிப்படையில் டூட்ஸி, ஹூட்டு, ட்வா எனப் பிரிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு, ஒரு பணம் படைத்த ஹூட்டு, தன்னை டூட்ஸி என மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதுபோன்ற வழிகள் அடையாள அட்டைக்குப் பின்பு நிரந்தரமாக அடைக்கப்பட்டன.

பின்னர், பெல்ஜியம் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க சபை ருவாண்டாவில் பிரபலமானது. இச்சபை, மெல்ல மெல்ல ஹூட்டுக்களின் தரப்பில் பேசத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, ஹூட்டுக்களின் மேம்பாடு பற்றிய குரல்கள் வலுக்கத் துவங்கின. 1957இல், பஹூட்டு கோட்பாடு என்னும் முதல் ஆவணம் வெளியாயிற்று. இது புள்ளியியல் அடிப்படையில், அதிகாரம் டூட்ஸிகளிடம் இருந்து, ஹூட்டுகளுக்கு மாற வேண்டும் எனக் கோரியது. 1959இல் அடுத்த திருப்புமுனை. டொமினிக் ம்போனியுமுட்வா (Domnique Mbonyumutwa) என்னும் ஹூட்டு தலைவர், தலைநகர் கிகாலியில் தாக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டார் என்ற தவறான தகவல் பரவ, ஹுட்டுக்கள், டூட்ஸிகளைக் கொல்லத் துவங்கினர்.

டூட்ஸிகளும் பதில் தாக்குதல்களைத் துவங்கினர். ருவாண்டப் புரட்சி என்னும் இந்தத் தகராறு துவங்கியது. இந்தக் காலகட்டத்தில், பெல்ஜியர்கள், பெரும்பான்மை ஹூட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் துவங்கினர். 1960இல், டூட்ஸித் தலைவர்கள் மாற்றப்பட்டு, ஹூட்டுக்கள் அந்த இடங்களில் நிரப்பப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெருவாரியாக ஹூட்டுக்கள் வென்று ஆட்சியமைத்தனர். 1962இல் ருவாண்டா, ஹூட்டுக்களின் தலைமையில் சுதந்திரம் பெற்றது.

டூட்ஸிகளின் வெளியேற்றம்

இந்தத் தகராறுகளுக்கு இடையே, ஹூட்டுக்களின் தாக்குதலுக்கு அஞ்சி, டூட்ஸிகள் ருவாண்டாவை விட்டு வெளியேறத் துவங்கினர். அருகில் உள்ள நாடுகளான புருண்டி, உகாண்டா, தான்ஸானியா, ஸயர் (இன்றைய காங்கோ) போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  உலகப் போர்களுக்குப் பின்பு, புவியியல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுவிட, தஞ்சம் புகுந்தவர்கள் அகதிகள் என்று அழைக்கப்பட்டனர். எனவே, அவர்கள் மீண்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்றாக வேண்டிய நிலை உருவாகியது. அகதிகள், தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்கத் துவங்கினர். ‘பாச்சைகள்’ (cockroaches) என்னும் பெயரில் இவை பின்னர் போர்க் குழுக்களாக மாறின. பாச்சைகள் என்னும் சொல், பின்னர் டூட்ஸிகளைக் குறிக்கும் ஒரு இழிச் சொல்லாக மாறியது.

மேலும் 1964களின் இறுதியில், கிட்டத்தட்ட 3 லட்சம் டூட்ஸிகள் ருவாண்டாவில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  டூட்ஸிகளுக்கு எதிரான இந்த வன்முறை, 1973க்குப் பின்பு, ஜ்வெனல் ஹப்யாரிமனா (Juvenal Habyarimana) என்னும் ஒரு ஹூட்டு தலைவர் ஒரு புரட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்ததும் குறைந்தது.

ருவாண்டாவின் மக்கள்தொகை, 1934இல் 16 லட்சமாக இருந்தது. இது 1989இல் 71 லட்சமாக உயர்ந்தது. தற்போது 1.3 கோடி. வேறு எந்த இயற்கை வளமும் இல்லாதபோது, இந்த மக்கள்தொகைப் பெருக்கமும், ருவாண்டாவின் இனப்படுகொலைக்குக் ஒரு காரணமாக இருக்கலாம் என்னும் ஒரு கொள்கையை, ஜெரார்ட் ப்ரூனியர் (Gerard Prunier) என்னும் வரலாற்றாசிரியர் முன்வைக்கிறார். வியாபார நிமித்தம், ருவாண்டாவின் பல்வேறு சந்தைகளில் பணியாற்றும்போது இது ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. சின்ன நாடு எனினும், இதன் மக்கள்தொகை சதுர கிலோமீட்டருக்கு இந்திய அளவை எட்டுகிறது. குறைவான வருமானம், பெட்ரோல் போன்ற வளங்கள் இல்லாமை, அதிக மக்கள்தொகை – பேரழிவுக்குச் சாதகமான சூழல்.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

படைத் தலைவர் பால் ககாமே

அண்டை நாடான உகாண்டாவில், 1981 – 86 வரை, உகாண்டாவின் புதர்ப் போர் நடந்தது. சர்வாதிகாரி மில்டன் ஓபாட்டேவை எதிர்த்து, முஸூவேணியின் (இன்றைய தலைவர்) தலைமையில், தேசிய எதிர்ப்புப் படை (National Resistance Army) போரிட்டது. இந்தப் போரில் மில்டன் ஓபாட்டே வீழ்த்தப்பட்டு, முஸூவேணி தலைவரானார். இந்தப் போரில், உகாண்டாவில் இருந்த ருவாண்டா அகதிகள், ஃப்ரெட் விகியாமா (Fred Rwigiyama) தலைமையில், முஸுவேணியுடன் சேர்ந்து போரிட்டார்கள். அதற்கு நன்றிக்கடனாக, போருக்குப் பின், ருவாண்டா அகதிகள் சேர்ந்து ஒரு ரகசியப் படை உருவாக முஸூவேணி உதவிசெய்தார். அது ருவாண்டா தேசபக்த சக்தி (Rwandan Patriotic Force – RPF) என அழைக்கப்படலாயிற்று. 1990 அக்டோபர் மாதம், விகியாமா, ருவாண்டாவின் மீது படையெடுத்தார். ஆனால், படையெடுப்பின் மூன்றாம் நாளே அவர் கொல்லப்பட்டார். நட்பு நாடுகளான ப்ரான்ஸும், ஸையர் (இன்றைய காங்கோ)வும் படைகள் அனுப்பி உதவி புரிந்தன. ருவாண்டா தேசியப் படை பின்வாங்கி மீண்டும் உகாண்டாவுக்குள் சென்றது.

விகியாமாவின் மரணத்துக்குப் பின், ருவாண்டா தேசியப் படையின் அடுத்த தலைவரான பால் ககாமே படைக்குத் தலைமையேற்றார். 1991 ஜனவரியில் மீண்டும் தாக்குதல்களைத் துவங்கினார். கெரில்லா முறைப் போர். தாக்கி, சில நாட்களுக்கு ஒரு நகரைப் பிடிப்பது. பிறகு, பின்வாங்குவது என. 1992 ஜூன் வரை இம்முறையில் தாக்குதல்களை நடத்தி பெரும் சேதம் விளைவித்தார். 1992இல், ஐந்து கட்சிகள் இணைந்துஒரு தற்காலிக அரசை நிறுவ ஒத்துக்கொண்டன. பால் ககாமே தாக்குதல்களை நிறுத்திவிட்டு, தான்ஸானியாவின், ஆருஷா என்னும் அழகிய நகரில் பேச்சுவார்த்தைகள் நடத்தத் துவங்கினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், ஓர் இடைக்கால அரசு அமைக்கும் முடிவு (broad based transitional government) எட்டப்பட்டது. அதில் ககாமேயின் ருவாண்ட தேசபக்த சக்தியும் பங்கெடுக்கும் எனவும் தீர்மானமாயிற்று. இது ‘ஆருஷா ஒப்பந்தம்’ என அழைக்கப்பட்டது. இந்த ஆருஷா ஒப்பந்தத்தைச் செயல்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை – UNAMIR (United nations assistance mission for Rwanda) என்னும் பிரிவை உருவாக்கி, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையை ரோமியோ டலேர் என்னும் கனடிய ஜெனரலின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். ஒப்பந்தப்படி, டலேரின் அமைதிப்படையும், பால் ககாமேயின் ருவாண்ட தேசபக்தி சக்தியும், தலைநகர் கிகாலியின் நாடாளுமன்றத்துக்கு அருகில் வந்து தங்கினர்.

ஜெனரல் ரோமியோ டலேர், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை
அதிகாரி

ஆனால், ஆருஷா ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மாபெரும் தடைகள் இருந்தன. ஜுவெனல் ஹப்யாரிமனாவின் மனைவியும், அவர் சகோதரரும், நாட்டின் படைத் தளபதிகளுடன் இணைந்து, ஓர் அடிப்படைவாதக் குழுவை உருவாக்கினார்கள். இவர்கள் ‘கங்குரா’ (kangura) என்னும் ஓர் அடிப்படைவாதப் பத்திரிகையையும் துவங்கினார்கள்.  அதில் ஹூட்டுக்களுக்குப் பத்துக் கட்டளைகள் என்ற பெயரில் மிக வெளிப்படையாக டூட்ஸிகளை எதிரிகள் என வரையறுத்தார்கள்.

டூட்ஸிகளும், டூட்ஸிகளை மணந்தவர்களும், அவர்களை ஆதரிக்கும் அல்லது நடுநிலை வகிக்கும் ஹூட்டுக்களும் துரோகிகள் என வரையறுக்கப்பட்டார்கள்.  குடியரசைக் காக்கும் கூட்டணி என்னும் ஒரு தீவிரவாத வலதுசாரிக் குழு, ஹப்யாரிமனாவின் கட்சிக்குள்ளேயே உருவானது. இது சில சமயங்களில், ஹப்யாரிமனா, டூட்ஸிகளுக்கு எதிராகச் செயல்படுவதில் தயக்கம் காட்டுகிறார் என, அவரையே விமரிசிக்கும் அளவுக்கு வளர்ந்தது. 

ஆருஷா ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும், டூட்ஸிகளுக்கு எதிரான கலவரங்கள் நின்றபாடில்லை. அரசிலும், ராணுவத்திலும் தீவிரவாதிகளை வெளியேற்ற முயன்ற ஹப்யாரிமனாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவருக்கு எதிரான சதிகள் துவங்கின.  1993இன் துவக்கத்தில், அரசின் / ராணுவத்தின் தீவிரவாத அமைப்பு, அழிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரிக்கத் துவங்கியது எனவும், அதில் ஹப்யாரிமனாவின் பெயரும் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது.

தீவிரவாத அமைப்பு, ‘ஆர்டிஎல்எம்சி’ (RTLMC) என்னும் ஒரு வானொலி நிலையத்தைத் துவங்கி, மிக வெளிப்படையாக டூட்ஸிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், பாடல்கள், அசிங்கமான நகைச்சுவைகள் என ஒலிபரப்பத் துவங்கியது. மக்களுக்கு, பாதுகாப்புப் பயிற்சி என்னும் பெயரில் ஆயுதமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தெளிவாகத் திட்டமிட்டு, ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் டூட்ஸிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பட்டியல்கள் தயாராக வைக்கப்பட்டன.

ருவாண்டாவின் கருப்பு நாள்

இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு தொடர்பும் உண்டு. அது அண்டை நாடான புருண்டி. ருவாண்டாவையும், புருண்டியையும் ஒரு மலைத் தொடர் பிரிக்கிறது. இரு நாடுகளிலும் ஹூட்டுக்களும் டூட்ஸிகளும் வசிக்கின்றனர். இரண்டிலும் ஹுட்டுக்கள் பெரும்பான்மை; டூட்ஸிகள் சிறுபான்மை. 1993 ஜூன் மாதம், அந்த நாட்டின் அதிபராக முதல்முறையாக, மெல்க்யார் டடாயே (Melchior Ndadaye) என்னும் ஹூட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 93 அக்டோபரில், புருண்டியின் தீவிரவாத டூட்ஸி ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது ருவாண்டாவின் ஹூட்டுகளுக்கு மேலும் வெறியேற்றியது, டூட்ஸிகளை சுத்தமாக அழித்தொழிக்கும், ‘இறுதித் தீர்வு’ என்னும் முடிவை எட்டினர் ஹூட்டு சக்தியினர்.

ராணுவம் ஏகே 47 போன்ற ஆயுதங்களை வாங்கி வீரர்களுக்கும், தீவிரவாதக் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கத் துவங்கினர். இந்த ராணுவக் கொள்முதலால், பல நாடுகள் பயன்பெற்றன. இதில் மிகமுக்கியமான ஆயுத ஒப்பந்தத்தை  போட்ரோஸ் போட்ரோஸ் காலி (Boutros Boutros Ghali) என்னும் எகிப்தின் வெளியுறவு அமைச்சர் செய்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் பின்னர், ருவாண்டா அழிவின்போது, ஐக்கிய நாடுகளின் தலைவராக இருந்தவர்.

ஹப்யாரிமனாவைச் சுமந்துவந்த விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் காட்சி

இதில் 1994 ஜனவரியின், அமைதிப்படையின் தலைவர் ரோமியோ டலேருக்கு, ராணுவத்தின் இறுதித் தீர்வு நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் ஒரு உளவாளி மூலம் தெரியவருகின்றன. அதை, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு அனுப்பி, அதைத் தடுக்க முயற்சிகள் எடுக்க அனுமதிக்குமாறு எழுதுகிறார். 5000 வீரர்களைக் கொண்ட அமைதிப்படையால், ருவாண்டாவில் அமைதியை நிலைநாட்ட முடியும் என வேண்டுகோள் விடுக்கிறார்.

ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி மறுத்தவர் பின்னர் ஐக்கிய நாடுகளின் தலைவராக ஆன கோஃபி அன்னான். இந்த முடிவின் பின்னர் பல்வேறு நாடுகளின் அரசியல் நிலைமைகளும், நிதி போன்ற விஷயங்களும் இருந்திருக்கலாம். அந்த முடிவின் கட்டாயங்கள் என்னவாக இருந்தாலும், அந்த முடிவு 8 – 10 லட்சம் மக்களின் மரண சாசனமாக மாறியது என்பது உண்மை. இதை ரோமியோ டலேர் மிகக் காட்டமாகத் தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

ருவாண்டாவின் வரலாற்றில் 1994 ஏப்ரல் 6 கருப்பு நாள்.  ருவாண்டாவின் தலைவர் ஜுவனல் ஹப்யாரிமனாவையும், அண்டை நாடான புருண்டியின் தலைவர் சைப்ரியன் டர்யாமிராவையும் (cyprien Ntaryamira) தான்ஸானியாவில் இருந்து கொண்டுவந்த விமானம், ருவாண்டாவின் தலைநகரம் கிகாலியில் இறங்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.  இதைச் செய்தது ககாமேயின் ருவாண்டா தேச பக்திப்படை என அறிவித்து, ரவாண்டா ராணுவமும், தீவிரவாதக் குழுக்களும் இறுதித் தீர்வைச் செயல்படுத்தத் துவங்கினர். இந்த அழிவுகளை, ருவாண்டா அதிபரின் காவல் படையினர் முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

(தொடரும்…)

(முன்பு ‘சொல்வனம்’ மின்னிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்).

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியா: கல்வியும் சுகாதாரமும்
தான்சானியாவின் பிரதான நகரங்கள்
தான்சானியா: முக்கியத் தலங்களும், நகரங்களும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1


1




அபராதம்இந்தியாவை துண்டாடும் திட்டம்குழந்தைகளைக் கையேந்த விடாதீர்!டாக்டர் ஜீவா விருது சமஸ் பேட்டிசங்க இலக்கியங்கள்விளிம்புநிலைஅமி்த் ஷாஹமாஸ் இயக்கம்ஜவாஹர்லால் நேருஷெர்மன் சட்டம்பா வகைபட்ஜெட் அருஞ்சொல்சாப்பாட்டுப் புராணம் புரோட்டாகர்த்தவ்யபத்ஜெயமோகன்தமிழ்நாடு 2022ஆரென்டெட் மைக்கேல் கட்டுரைபிராமண சமூகம்இந்து கடவுளர்கள்நிதி ஆணையம்சமாஜ்வாதி கட்சிசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுதிமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?பதினெட்டாம் பெருக்குவேஷதாரியா?ஜே.பி.நட்டாஅதிகாரத்தின் வடிவங்கள்தொழில் துறை 4.0ஓபிஎஸ்திருமாவளவன் சமஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!