கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன்
03 Dec 2023, 5:00 am
0

ம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.

ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்து போகலாம். அப்படியானால், அது சாதாரண களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!

களைப்பைப் பற்றிச் சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிச் சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாதது போல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.

காரணம் என்ன?

களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.

களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால் பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்து களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முறையற்ற உணவுப்பழக்கம்

கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்புக்கு வரவேற்பு கொடுக்கும். காரணம், இந்த உணவுகளில் வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும் கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும். ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவுகளில் ‘குளூட்டன்’ எனும் என்சைம் உள்ளது. இது ஒவ்வாமை ஆனால், ‘சிலியாக் நோயை’ (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதான தொல்லையாக இருக்கும். நேரந்தவறி சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?

கு.கணேசன் 03 Apr 2022

ஊட்டச்சத்துக் குறைவு

உடல் உற்சாகமாக உழைப்பதற்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் உள்ள சமச்சீரான உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால், வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள்.  இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் – பி12, வைட்டமின்- டி, போலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.

ரத்தசோகை

ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றி பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி,முறையற்ற மாதவிலக்கு காரணமாகவும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.

தொற்றுநோய்கள்

எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளு காய்ச்சல், போன்ற சாதாரண தொற்றுக்களில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி மஞ்சள்காமாலை, காசநோய் என்று பல விபரீத நோய்கள் வரை களைப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குணமானதும் களைப்பும் மறைந்துவிடும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

உடற்பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?

கு.கணேசன் 30 Jan 2022

தூக்கமின்மை

இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீத தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலைநேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகள் உள்ளவர்களுக்கு இம்மாதிரியாகத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.

மருந்துகளின் பக்க விளைவு

தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.

நீரிழந்த உடல்

ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்

கு.கணேசன் 23 Jan 2022

உளவியல் காரணங்கள்

தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.

பிற காரணங்கள்

தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், நுரையீரல் நோய், புற்றுநோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்றுநோய்க்கு மருந்துச் சிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்ப காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகை பிடிப்பது, பசிக் குறைவு, அதீத பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.

நாட்பட்ட களைப்பு

ஒருவருக்குக் களைப்பு 6 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome) என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

பரிசோதனை என்ன?

களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்ப பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்த அணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ செய்து களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவியலாளரின் ஆலோசனை களும் தேவைப்படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

கார்போவுக்கு குட்பை!

கு.கணேசன் 09 Jan 2022

தடுப்பது எப்படி?

  • களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
  • அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
  • தினமும் குறைந்தது 6 மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
  • உடல் பருமன் இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
  • சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள்.
  • மேற்கத்திய உணவுகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
  • காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
  • தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
  • இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
  • வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேரமேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்ய வேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
  • தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
  • குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர்களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
  • உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
  • காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
  • புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • மது அருந்த வேண்டாம்.
  • மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக்கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப்பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?
உடற்பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?
உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்
கார்போவுக்கு குட்பை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2

1





கண்காணிப்பின் வரலாறுகருத்தொற்றுமைநாத்திகம்மருத்துவம்திறந்த வெளிச் சிறைதலித் இளைஞரின் தன்வரலாறுதொகுதிகலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்ஆசை கட்டுரைஈஷா ஆஷ்ரம்கண்களைத் திறந்த கண்காட்சிகள்லாலு சமஸ்பிரைஸ் ஆஃப் தி மோடி இயர்ஸ்உணவுத் தன்னிறைவுகொலஸ்ட்டிரால்டெல்லி பல்கலைக்கழகம்கட்டணமில்லாப் பயணம்விலைவாசிசபாநாயகர் அப்பாவுதர மதிப்பீடுதில்லி கலவர வழக்குகள்சரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புஊடக தர்மம்கொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!முக்கியமானவை எண்கள்அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?சாலைதலைமுடிமூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!கல்விக் கட்டணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!