கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு

கு.கணேசன்
19 Jun 2022, 5:00 am
1

இன்றைய தினம், பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர் ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது. இப்போதோ பதின்பருவத்தினரையும் பாதிக்கிற நோயாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?

உடல் உழைப்பு குறைந்துவருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக் காரணங்கள். நாட்டில் கணினித் துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு 35% இளைஞர்கள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலியை ஏற்படுத்துகிற அடுத்த காரணம்.

இன்றைய இளைய தலைமுறையினர் இந்தியப் பாரம்பரிய உணவுமுறையை ஓரங்கட்டிவிட்டார்கள். மேற்கத்திய உணவுக் கலாச்சாரத்துக்கு மாறிவிட்டார்கள். இதனால், சிறு வயதிலேயே உடற்பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகிறார்கள். இந்த அவதி நாளடைவில் மூட்டுவலிக்கும் வழி அமைத்துவிடுகிறது.  

முழங்கால் மூட்டு

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் ‘மூட்டுவலி’ (Arthritis) என்று பொதுவாகச் சொல்கிறோம். தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல் பகுதியும் இணைகிற இடமே முழங்கால் மூட்டு (Knee Joint). இது உடல் எடையைத் தாங்குகின்ற முக்கியமான மூட்டு.

மூட்டுகளிலேயே முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு சற்று வித்தியாசமானது. மூட்டைப் பிணைக்கிற நாண்களும் (Cruciate ligaments), மெனிஸ்கஸ் (Meniscus) எனும் குஷன்களும் இந்த மூட்டில்தான் உள்ளன. அடுத்து, அசையும் மூட்டுகளில் மிகப் பெரியதும் இதுதான். இங்குள்ள எலும்புகளின் தலைப் பகுதியை சைனோவியல் படலம் (Synovial membrane) சூழ்ந்துள்ளது. இது ‘சைனோவியல் திரவம்’ என்று பசை போன்ற திரவத்தைச் சுரக்கிறது. மூட்டில் இது ஒரு மசகுபோல் வேலை செய்கிறது. மூட்டு எலும்புகள் உரசிக்கொள்ளாமல் அசைவதற்கு உதவுகிறது. அடுத்து, மூட்டுகளைச் சுற்றி ‘கார்ட்டிலேஜ்’ (Cartilage) எனும் மிருதுவான குருத்தெலும்புகள் உள்ளன. இவைதான் மூட்டுகள் எளிதாக அசைய உதவுகின்றன.

பொதுவான காரணங்கள்

உடற்பருமன், வயது அதிகரிப்பது, மூட்டில் அடிபடுதல், காயம், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, எலும்பு வலுவிழப்பு நோய் (Osteoporosis) ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

மூட்டு எலும்பு வளைவு

சிலருக்குப் பிறவியில் கால் நேராக இருந்தாலும் 30 வயதுக்கு மேல் வளையத் தொடங்கும். இவ்வாறு கால் வளைவு உள்ளவர்களில் 100இல் 90 பேருக்கு முழங்கால் மூட்டு வெளிப்பக்கமாகவும் கால் உள்பக்கமாகவும் வளைய ஆரம்பிக்கும். இது பார்ப்பதற்கு வில் போன்று இருக்கும். இதற்கு ‘ஜெனு வேரம்’ (Genu varum) என்று பெயர். 100இல் 10 பேருக்கு முழங்கால் மூட்டு உள்நோக்கியும் கால் வெளிப்பக்கமாகவும் வளைய ஆரம்பிக்கும். இதை ‘முட்டிக்கால்’ என்று சொல்வார்கள். ‘ஜெனு வல்கம்’ (Genu valgum) என்று இதற்குப் பெயர்.

இவற்றின் விளைவால், முழங்கால் மூட்டின் உள்பக்கமும், முழங்கால் மூட்டுச்சில்லும் அதிகத் தேய்மானம் அடைகின்றன. காரணம், நாம் நிற்கும்போது, நடக்கும்போது உடல் எடையைத் தாங்குகின்ற விசை நேர்கோட்டில் செல்ல வேண்டும். இது முழங்கால் எலும்புகள் நேராக இருந்தால் மட்டுமே சாத்தியம்; வளைவாக இருந்தால், உடல் எடையைத் தாங்க முடியாமல் முழங்கால் எலும்புகள் சீக்கிரத்தில் தேய்ந்துவிடுகின்றன.

அடிபடுதல் ஒரு காரணம்

மூட்டில் வலி ஏற்படுவதற்கு முழங்காலில் அடிபடுவதும் ஒரு முக்கியக் காரணம்தான். அப்படி அடிபடும்போது முழங்கால் மூட்டுச் சமன் இல்லாமல் போவதால், மூட்டின் ஒரு பகுதி தாழ்ந்து போகும். இது மூட்டின் தேய்மானத்துக்கு வழி அமைக்கும். மூட்டில் அடிபடுவதைக் காலத்தோடு கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், இந்த நிலைமையைத் தவிர்க்கலாம். இல்லை என்றால் மூட்டுவலி தொல்லை கொடுக்கும்.

மூட்டுத் தேய்மானம்

முழங்கால் மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம் அங்கு ஏற்படுகிற தேய்மானம்தான். வயதாக ஆக, குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாகிறது. இதை ‘முதுமை மூட்டழற்சி’ (Osteoarthritis) என்கிறார்கள். முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக இருக்கும். இதற்குக் காரணம், ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் அதில் சுரப்பதுதான். இதுதான் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது; குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. பொதுவாக, முதுமையில் கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிதாகிவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல நமக்கு வயதாகும்போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மூட்டுவலி ஏற்படுகிறது

எலும்பு முடிச்சுகள்

நாட்கள் ஆக ஆக, அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில் சிறிதாக எலும்பு முடிச்சுகள் (Osteophytes) முளைக்கின்றன. இதனால் குருத்தெலும்பு கடினமாகிவிடுகிறது. தோலில் ஏற்பட்ட காயம் ஆறிய பின்பு அங்கு தழும்பு ஏற்படுகிறதல்லவா? அதுமாதிரிதான் இது. இதன் விளைவால், மூட்டின் முனைகளில் காணப்படுகின்ற வழுவழுப்புத்தன்மை முழுவதுமாக மறைந்து சொரசொரப்பாகிவிடுகின்றன. இந்த நிலைமையில் முழங்காலை அசைத்தால், இந்தக் கடினப்பகுதிகள் உரசுகின்றன. இதனால் மூட்டுவலி கடுமையாகிறது.

மூட்டு வீக்கம்

மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிக வேலை கொடுத்தால், குருத்தெலும்பில் திடீரென்று அழற்சி அதிகமாகிறது; சைனோவியல் படலம் அதிக திரவத்தைச் சுரக்கத் தொடங்குகிறது. இதனால், மூட்டில் நீர் கோத்து, வீங்கிக்கொள்கிறது. இதுபோல், முழங்காலில் அடிபட்டால், கால் சறுக்கிவிட்டால், முழங்காலைத் தவறாகப் புரட்டிவிட்டால்… இப்படி நீர் கோத்து வீங்கிக்கொள்வது உண்டு. அப்போது முழங்காலை அசைக்கவே முடியாத அளவுக்கு மூட்டு இறுக்கத்தன்மையை அடைகிறது. இந்த நிலைமை ஏற்பட்டவுடன், மூட்டை அசைக்க முடியாத அளவுக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது.  

மூட்டுத் தேய்மானத்தை எப்படி அறிவது?

சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

என்ன பரிசோதனைகள்?

மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டால், உடனே குடும்ப மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் எந்த வகையான மூட்டுவலி என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும். குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால், எலும்புநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

மூட்டுவலிக்கு சிகிச்சை

எலும்பு தேய்மானத்தால் மூட்டுவலி ஏற்படுபவர்களுக்கு பலதரப்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பநிலையில் உள்ள மூட்டுவலிக்கு வலி நிவாரணிகள் மற்றும் இயன்முறை சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடைத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். பொதுவாக, மூட்டுவலிக்கு அதிக நாட்கள் தொடர்ந்து வலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. இதனால், சிறுநீரகங்கள் பாதிப்படையும். எலும்புகள் பலவீனம் அடையும். இரைப்பையில் புண் வந்துவிடும். சர்க்கரை நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு.

சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ‘ஆர்த்ராஸ்கோப்’ மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் (Arthroscopic lavage) செய்யப்படும். இதனால் மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருள்கள் வெளியேறிவிடும். இதன் பலனால், 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும்.

கால் வளைவுக்கு சிகிச்சை

கால் வளைவு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. மூட்டுவலி ஆரம்பிக்கும் முன்பே இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்வது வருங்கால சிக்கல்கள் பலவற்றைத் தடுக்கும். மூட்டில் தேய்மானம் இருப்பவர்கள், நடுத்தர வயதுக்குள் இந்த அறுவை சிகிச்சியை செய்துகொள்வது நல்லது. இல்லையென்றால், இந்த சிகிச்சையின் முழுப் பலனையும் பெற முடியாது.

செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை

மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், இந்த சிகிச்சைகள் முழுப் பலன் தராது. அப்போது முழுமையான தீர்வு தருவது, ‘செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை’ (Total Knee Replacement) மட்டுமே. உலோகமும் பாலிஎதிலீனும் (Polyethylene) கலந்து தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டைப் பொருத்தும் அறுவை சிகிச்சை இது. இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயம்… ‘மூட்டு மாற்றம்’ என்றதும் முழங்கால் மூட்டு மொத்தத்தையும் அப்படியே கொத்தி எடுத்துவிட்டு, உலோக மூட்டை அங்கு பொருத்திவிடுவதாக அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. மூட்டில் குருத்தெலும்பு உள்ள மேல்தளத்தை மட்டுமே இதில் மாற்றுகிறார்கள். மூட்டின் தசைகள், நரம்புகள் போன்றவற்றுக்கு பாதிப்பு இருந்தால், இந்த சிகிச்சையால் அவற்றை சரி செய்ய முடியாது.

முன்பெல்லாம் இந்தச் செயற்கை மூட்டுகள் 6 வருட காலம்தான் தாக்கு பிடிக்கும். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டுகள் 20 ஆண்டுகள் வரை உழைக்கின்றன. இதைப் பொருத்திக்கொண்டால், நடக்கலாம்; மாடிப் படிக்கட்டுகளில் ஏறலாம்; கார் ஓட்டலாம். என்ன, கால்பந்து விளையாட முடியாது.

இளைய வயதினருக்காகவே இப்போது புதிதாகப் புகுந்துள்ளது ‘ஸ்டெம் செல் குருத்தெலும்பு சிகிச்சை’ (Stem cell cartilage treatment). இதை நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்கின்றனர்.

மூட்டுவலியைத் தடுப்பது எப்படி?

இளம் வயதிலிருந்தே பால், பால் பொருள்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது.

தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் – டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது. சிறு வயதிலிருந்தே நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும்.

உடல் எடையை வயதுக்கு ஏற்றபடி பராமரிக்க வேண்டியது கட்டாயம். நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே, உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும். தவிர, முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியைத் தள்ளிப்போட முடியும். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

முழங்கால் மூட்டு பிரச்சினையைப் பற்றித் தேவைப்படும் ஆலோசனைகள் அனைத்தையும் இவ்வளவு எளிமையாக எடுத்துரைக்க மருத்துவர் கு. கணேசன் அவர்களால் மட்டுமே முடியும்! எலும்பு வலுவிழப்பு நோய், முதுமை மூட்டழற்சி,எலும்பு முடிச்சுகள் என்று அருஞ்சொற்களுக்கும் பஞ்சமில்லை!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பழைய ஓய்வூதிய திட்டம்வளரும் நாடுமேடைக் கலைவாணர்சிலம்புமாத்ருபூமி‘சிப்கோ’ இயக்கம்என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?குஜராத் படுகொலைஊடகர் கலைஞர்நிதிநிலை அறிக்கை 2024ஆளுநர் ஆர்.என்.ரவிமுதுகு வலிக்குத் தீர்வு என்ன?சட்டக்கூறுகள் இடமாற்றம்பாஜக நிராகரிப்புஹவுஸ் ஹஸ்பெண்ட்அனுஷா நாராயண்கேடுதரும் மருக்கள்மலம் அள்ளும் தொழில்ஆன்லைன் வகுப்புஅணு ஆயுதங்கள்சமஸ் - ஜெயமோகன்உடல்மொழிஇந்தி இதழியல்h.v.handeஎலும்பு வலிமை இழப்புஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!சமாதான பேச்சுவார்த்தைவசுந்தரா ராஜ சிந்தியாஉச்ச நீதிமன்ற நீதிபதிஅடுத்த கட்டத்துக்குச் செல்கிறது ‘அருஞ்சொல்’

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!