கட்டுரை, புதையல், அரசியல், ஆளுமைகள், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

லெனின் இன்று தேவையா?

பி.ஏ.கிருஷ்ணன்
21 Sep 2021, 5:00 am
0

லெனின் உலகை வலம் வருகிறார்
கருப்பு, வெள்ளை பழுப்பு- எல்லா நிறத்தவரும் அவரை வரவேற்கின்றனர்.
மொழி தடையே அல்ல. 
அவரை அரிதினும் அரிதான மொழியைப் பேசுபவர்களும் நம்புகின்றனர். 

ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞரான லாங்ஸ்டன் ஹ்யூஸ் எழுதிய இந்த வரிகள் சென்ற நூற்றாண்டின் எழுபதுகள் வரை உண்மையாக இருந்தன. இன்றைய உண்மை வேறு. லெனினைப் பற்றி அறிந்தவர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டேவருகிறது. இதற்குக் காரணங்கள் பல. லெனினின் வழி வந்தவர்கள் செய்த தவறுகளும் இவற்றில் ஒன்று. ஆனால் முக்கியமான காரணம் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு முதலாளித்துவம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம். இந்த முன்னேற்றம் ஏற்றத்தாழ்வை ஒழிக்குமென்றோ அல்லது போரற்ற சமுதாயத்தை உருவாக்குமென்றோ என்ற நம்பிக்கை கொள்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மாறாக முதலாளித்துவத்திற்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் கரங்களை ஓங்க வைக்கும் வழிமுறைகளை நமக்குக் காட்டும் தலைவர்கள் இன்று இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.  

அன்று லெனின் இருந்தார். அவர் ஜனவரி 21ம் நாள் 1924ம் ஆண்டு மறைந்தபோது, விடுதலைக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மக்களும் அவருடைய இழப்பை தங்களது இழப்பாகக் கருதினார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விடுதலை இயக்கமும் லெனினும்

உலகத் தலைவர்களில் தேசீய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் லெனின். இதை நமது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட எல்லாத் தலைவர்களும் நன்றியோடு நினைத்தனர். காந்தி சொன்னது இது: “லெனின் போன்ற மனவலிமை மிக்க பெருந்தலைவர்கள்   லட்சியத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு நிச்சயம்  பலனை அளிக்கும். அவரது தன்னலமற்ற தன்மை  பல நூற்றாண்டுகளுக்கு ஓர் உதாரணமாக விளங்கும். அவரது லட்சியமும் முழுமை அடையும்.” 

நேருவை படித்த எவரும் அவருக்கு லெனின் மீதிருந்த பெருமதிப்பை உணரத் தவற மாட்டார்கள். பகத் சிங் தூக்குமேடை ஏறுமுன்பு படித்த கடைசிப் புத்தகம் லெனினின் வாழ்க்கை வரலாறு என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். 

லெனினும் நமது தேசீய விடுதலைப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார். உதாரணமாக பிரெஞ்சு அரசு  சாவர்க்கரை 1910 ஆண்டு அவர் பிரிட்டனின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது சிறை செய்தது. அவரை விடுதலை செய்யக் குரல் கொடுத்தவர்களில் லெனின் முக்கியமானவர் என்று சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

லெனினின் தேவை

சரி, விடுதலை இயக்கத்தின்போது அவர் தேவையாக இருந்திருக்கலாம். இன்று அவரது தேவை என்ன என்று சிலர் கேட்கலாம். லெனின் எழுதியதைக் கூர்ந்து படித்திருப்பவர்கள் அவ்வாறு கேட்கமாட்டார்கள். 1918ம் ஆண்டு அவர் ‘ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இவை ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது, நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது, ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தை பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது, மற்றும் உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.

இதில் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால் முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசீய விடுதலைப் போராட்டங்களில் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக்கு பெயரளவில் விடுதலை கிடைத்தது.  ஏகாதிபத்தியம்  லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம். ஏற்ற தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது முற்றிலும் சாத்தியமானது. 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது. இவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் வளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்காது.  இதனாலேயே இன்று உலக முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதவாதிகளும், பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்து விட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள். 

லெனின் முக்கியமான மற்றொன்றையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  ஏகாதிபத்தியம் ’லேபர் அரிஸ்டோக்ரசி’ என்று அழைக்கப்படும் உயர் குலம் ஒன்றை உழைக்கும் மக்களிடையே உருவாக்குவதைப் பற்றி. இன்று இந்த உயர் குலம் முன்னேறிய நாடுகளில் மட்டுமன்று, முன்னேறும் நாடுகளிலும் உருவாகியிருக்கிறது. உழைக்கும் மக்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் இந்த உயர்குலத்திற்காகப் பேசும் அவலத்தையும் நாம் காண்கிறோம். 

1902ம் ஆண்டு லெனின் ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை எழுதினார். இது உழைக்கும் மக்களுக்கான கட்சி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது.என்ன சொல்கிறது என்பது பற்றி மார்க்சீய அறிஞர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிக்கு உழைக்கும் மக்களின் தேவைகள் என்ன என்பது பற்றிய புரிதலும் அவர்களுடன் எவ்வாறு சேர்ந்து இயங்க வேண்டும் என்பது பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற லெனினின் அடிப்படைக் கருத்து குறித்து எந்த வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் புரிதலும் தெளிவும் உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிக்கோ அல்லது கட்சிகளுக்கோ இருந்திருந்தால், இன்று கேஜ்ரிவால்களின் தேவை இருந்திருக்காது.தேசீயப் பேரினவாதிக் கட்சிகளும் சாதிக் கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் தலைதூக்கியிருக்க முடியாது. எனவே இந்தியாவைப் பொறுத்தமட்டும் மக்களுக்கு அடிப்படை விடுதலை இன்று வரை கிட்டவில்லை என்று கருதுபவர்கள் காந்தியையும் அம்பேத்கரையும் மார்க்சையும் ஏங்கல்சையும், குறிப்பாக லெனினையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். கூடவே முதலாளித்துவத் தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிதலும்  இருந்தாக வேண்டும். அது லெனினுக்கு நிச்சயம் இருந்தது. 

என்றும் தேவையானவர்

லெனினுடைய பெயர் வரலாற்றின் அடிக்குறிப்புகளுக்குள் தள்ளப்படும் நாட்கள் தொலைவில் இல்லை என்று சில மேற்கத்திய வல்லுனர்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். லெனின் அவ்வளவு எளிதாக மறையக்கூடியவர் அல்ல. ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கப்படுதல், ஏகாதிபத்தியத்தின் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள், முற்றுகைகள், ஏகபோக முதலாளிகளுக்குத் தரப்படும் தங்குதடையற்ற சுதந்திரம் போன்றவை உலகில் இருக்கும் வரை, லெனின் சொன்னவையெல்லாம் நினைவில் இருக்கும். ’எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் ஓர் நிறை’ ஆகும் நாள் வரும்போது அவரது பெயர் நன்றியோடு சொல்லப்படும். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்நுரையீரல் புற்றுநோய்அருஞ்சொல்சித்த மருந்துதி ஸ்டேட்ஸ்மேன்செயலற்றத்தன்மைபேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலைவி.கிருஷ்ணமூர்த்திதியாகு நூலகம்இடைத்தேர்தலும் ஒரே தேர்தலும்குஹா கட்டுரை மொழிபெயர்ப்புமலையாளம்சுயமான தனியொதுங்கல்அச்சத்துடனா?கே.அஷோக் வர்தன் ஷெட்டிமேதா பட்கர்நூற்றாண்டுபாஜக எம்.பிமோடியின் உள்நோக்கங்கள்விலையில்லா மின்சாரம் அன்றும் இன்றும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: ராமனை பின்பற்றுமாwritersamasமுதல் தியாகி நடராசன்ரயில் எரிப்புமராத்தியர்கள்பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்சாலிகிராமம் வழங்கும் பாடம்சுடுகாடுயோகியை வீழ்த்துவது எளிதல்ல! கடினமான காலங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!