இன்னொரு குரல், விவசாயம் 2 நிமிட வாசிப்பு
நெல் கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பானவையாக மாறட்டும்!
நேற்று காலை ஊரில் உள்ள எனது தம்பியுடன் வழக்கமான விசாரிப்புக்காக அலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் அவன் தார்பாய் ஒன்றை வாடகைக்கு எடுத்து வருவதற்காக ஓடிக்கொண்டிருந்ததாகச் சொன்னான்.
எனக்கு வயிற்றைக் கலக்கியது. தொடர் மழையால் அறுவடை நிலையில் இருந்த பயிர்கள் பல வயல்களில் சாய்ந்துவிட்டன; தண்ணீர் தேங்கி இருப்பதால், அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் கொண்டுசெல்வதிலும் சிரமம் இருப்பதாகப் பல நண்பர்கள் கூறியிருந்தனர். எங்கள் வயலில் எப்படியோ அறுவடை முடிந்திருந்தது. நெல் கொள்முதல் நிலையத்துக்கும் அன்றைய தினம் அறுத்த நெல் மூட்டைகள் கொண்டுசெல்லப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் தம்பி இப்படிக் கூறினான். கொள்முதல் நிலையத்திலேயே பிரச்சினையோ என்று யோசனையில் ஆழ்ந்தேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தம்பியிடமிருந்தே நிதானமாக அழைப்பு வந்தது. அக்டோபர் 2 சனிக்கிழமை காந்தி ஜெயந்தி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து விடுமுறை என்பதால், நெல் கொள்முதல்செய்யப்படாமல் நிலையங்களில் நிறையத் தேங்கிக்கிடப்பதாகச் சொன்னான். மூன்று அல்லது நன்கு நாட்கள் ஆகலாம்; அதுவரை நெல்லை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என்று சொன்னான். கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுசென்றுவிட்டாலும், அது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணம் கொடுக்கப்படும்வரை அது விவசாயிகளின் பொறுப்புதான். மழை என்றுதான் இல்லை; திருட்டு போனாலும், அது விவசாயிகளின் பொறுப்புதான்; அவர்களுக்கான இழப்புதான்!
எங்கள் நெல் காப்பாற்றுப்பட்டுவிட்டது; ஆனால், ஏராளமான விவசாயிகளுக்கு மழையால் பேரிழப்பு என்று தம்பி சொன்னபோது எனக்கு அழுகை வந்தது. யார் இழப்பென்றாலும் அது இழப்புதானே; ஒட்டுமொத்த முதலீடு - உழைப்பும் நாசம்!
விவசாயிகளுக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்திருக்கும் தமிழக அரசு விவசாயிகளின் விளைச்சலைப் பாதுகாக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; குறைந்தபட்சம் தன்னுடைய கொள்முதல் நிலையங்களையாவது பாதுகாப்பான இடங்களாக அது கட்டமைக்க வேண்டும். பருவநிலை மாற்றம் தொடர்பில் அரசு சார்ந்த துறைகள்தான் அதிகம் பேசுகின்றன. எதிர்பாரா மழையை எதிர்கொள்ள என்ன முன்னேற்பாடு என்று அரசு திட்டமிட வேண்டாமா? குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே செயல்படும் நேரடிகொள்முதல் நிலையங்கள் இதுபோன்ற கடினமான காலங்களில் விடுமுறை இல்லாமல் செயல்பட்டால்தான் என்ன?
ஒவ்வொரு கொள்முதலுக்கு முன்னரும், மாவட்ட ஆட்சியர் தலைமையில், களத்தில் உள்ள விவசாய சங்கத்தினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வேளாண் அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து, அவர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு ஏற்ப தகுந்த நடவக்கைகளை அரசு திட்டமிடலாம்.
விவசாயிகள் அறுவடை வரை பயிர்களை நல்ல முறையில் பாதுகாத்து, கொண்டுவந்துவிடுவதே பெரும் சவால். அப்படிக் கொண்டுவரப்படும் விளைச்சல் நாசமாகிவிட தானும் ஒரு காரணம் ஆகிவிடக் கூடாது என்ற அக்கறை அரசுக்கு வேண்டும்!
- இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Kaliaperumal Murugan 3 years ago
நிகழ்நிலை வர்த்தகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய முடியாதா?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.