கட்டுரை, இன்னொரு குரல், கல்வி 3 நிமிட வாசிப்பு

உதவிப் பேராசிரியர் பணி நியமனம், என்ன செய்யலாம்?

சா.விஜயகுமார்
09 Jun 2024, 5:00 am
0

மிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிற நிலையில் நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது; அது, பல வருடங்களாக அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு அந்தப் பணியை நிரந்தரம் செய்து தர வேண்டும் என்பதே. 

தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கௌரவ விரிவுரையாளர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருமாறு:

1. பல வருடங்களாக குறைவான ஊதியத்தில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் எங்களுக்கே அப்பணியை நிரந்தரம் செய்து தர வேண்டும்!

தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் வழக்கம் 1980களின் இறுதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு 1996இல் தொடங்கிய போட்டித் தேர்வு முறை 1998, 2000, மற்றும் 2007ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்டது. பிறகு பட்டப் படிப்பிற்கும், தேசிய அல்லது மாநில தகுதித் தேர்வு தேர்ச்சிக்கும், கற்பித்தல் அனுபவத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 2008, 2009, 2011, 2015ஆம் ஆண்டுகளின்போது நேர்காணல் வழி உதவிப் பேராசிரியர் பணி நியமனம் நடைபெற்றது.1

ஆக, 1980களிலேயே வழக்கொழிந்துபோன ஒரு நடைமுறையைத் திரும்பவும் கொண்டுவர வேண்டும் எனக் கேட்பது சரியல்ல. சொல்லப்போனால் முன்பு நடந்த போட்டித் தேர்வு, நேர்காணல்கள் முறைகளை ஒப்பிடுகையில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர உதவிப் பேராசிரியர்களாக மாற்றுவதென்பது பிற தேர்வர்களுக்குச் செய்யும் அநீதி.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சரி, கௌரவப் விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எழுந்ததற்கான முன்னுதாரணம் உண்டா? உண்டு. கர்நாடகத்தில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான செய்திகள் கிடைக்கின்றன.

ஆனால், கர்நாடக அரசு கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு ஊதிய உயர்வு (அதிகபட்சமாக ரூ.37,000 வரை); மருத்துவக் காப்பீடு, பத்து வருடங்களுக்கும் மேல் பணியாற்றி இருப்பின் பணி ஓய்வுப் பலனாக ஐந்து லட்சம் ரூபாய்; போட்டித் தேர்வில் 5% மதிப்பெண் உள்ளிட்டவை வழங்கப்படும் என்கிறது.2 ஆனால், நிரந்தரப் பணிக்கு தேர்வுமுறை என்கிற ஒற்றை வழிதான் என்றிருக்கிறது. ஆக, இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு வழக்கத்தைத் தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கௌரவ விரிவுரையாளர்கள் கேட்பது சரியல்ல.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஆசிரியர்களும் கையூட்டும்

பெருமாள்முருகன் 27 Jan 2024

2. ஏற்கெனவே மாநில அல்லது தேசிய தகுதித் தேர்வில் வென்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவது சுமையைக் கூட்டுகிறது. பிறகு இந்தத் தகுதித் தேர்வுகளுக்கோ, முனைவர் பட்டத்திற்கோ பொருள் என்ன?

போட்டித் தேர்வு முறையை இந்திய ஒன்றியத்தில் கடைசியாக அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய கேள்வி எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கேயும் தேசிய / மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தகுதித் தேர்வுடன் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் போட்டித் தேர்வு எழுதியே உதவிப் பேராசிரியர் பணியில் சேர்கிறார்கள். இதனால் அந்த மாநிலங்களில் கல்லூரிகளில் நடக்கும் கற்பித்தல், வழிகாட்டல், ஆய்வின் தரம், ஒப்பீட்டுரீதியில் அதிகம். 

பிற மாநிலங்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கெனப் போட்டித் தேர்வை நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களைச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைத்து, தேசிய அல்லது மாநில தகுதி தேர்வுகள், முனைவர் பட்டம், வெளியிட்ட ஆய்விதழ்கள் போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை வெளியிட்டு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்துகிறார்கள்.

கௌரவ விரிவுரையாளர்கள் கேட்பதுபோல் தற்போது பணியில் இருப்பவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது இடஒதுக்கீட்டிற்கே எதிரானதாக அமையும். இதைக் கணித முறைப்படி பகுத்தறிய தற்போது பணியில் இருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் குறித்த தரவுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்போ அல்லது அரசோ பொதுவெளியில் வைக்க வேண்டும். 

3. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனம் நேர்காணல் வழியிலேயே நடத்தப்படுகிறது, எனவே அங்கு பல லட்சம் ரூபாய்கள் பணம் வாங்கிக்கொண்டே பணியர்மத்தப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவதில் என்ன தவறு?3 

இது ஊழலுக்கு எதிராக இன்னொரு அநீதியைப் பொருத்தும் முயற்சி. இதற்கு மாறாக அரசால் ஊதியம் வழங்கப்படும் அனைத்து ஆசிரியர்களையும் அரசே நியமிக்க வேண்டும்; அனைவரும் போட்டித் தேர்வு வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமாகத் தோன்றுகிறது இல்லையா?

எனவே, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனம் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வு முடிவுகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும். அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை இத்தேர்வின் கீழ் கொண்டுவருகையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்; முக்கியமாக இது அனைத்து தேர்வர்களுக்கும் சாதகமாகவே அமையும். அதாவது, வெற்றி வாய்ப்பைக் கூட்டும்.

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் இக்காலத்தில் லஞ்சம் கொடுத்துப் பணியில் சேர்ப்பவர்களை இனியும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல. ஒரு உதவிப் பேராசிரியர் பணிக்கான சந்தை விலை ஐம்பது லட்சத்திற்கும் மேல், கேரளாவில் எழுபத்தைத் தாண்டிவிட்டது. இந்நடைமுறை உள்ளங்கை நெல்லிக்கனி போல் சமூகத்தில் அனைவருக்கும் தெரியும் என்பதைவிட, தற்போது இந்த ஊழலுக்கான ஒப்புதல் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் பணி நியமனங்களும் போட்டித் தேர்வின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். 

4. அப்படி என்றால் அரசு நடத்தும் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கெனச் சலுகைகளே இல்லையா?

சலுகைகள் உண்டு. மேலும் அத்தகைய சலுகைகள் வழங்கப்படுவது தவறு. இதற்கு வேறெந்த மாநிலத்திலும் முன்னுதாரணம் இல்லை. அப்படி என்ன சலுகை வழங்கப்படுகிறது?

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறது தற்போதைய போட்டித் தேர்வு அறிக்கை. மாணவர்களை ஆய்வு நோக்கிற்குத் திருப்பத்தான் இந்தத் தேர்வு எனச் சொல்லும் அரசாணை, ஒருவரின் ஆய்வு அனுபவத்திற்கோ அல்லது ஒரு தனியார் கல்வி நிறுவனப் பேராசிரியரின் கற்பித்தல் அனுபவத்திற்கோ மதிப்பெண்கள் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மட்டும் அனுபவத்திற்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவது போட்டித் தேர்வையே கேலிக்கூத்தாகிவிடும். 

அரை மதிப்பெண்களே ஒருவரின் பணி வாய்ப்பைப் பறிக்கும் எனும்போது அனுபவத்தைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு என அதிகபட்சமாக 15, வாய்மொழித் தேர்வுவழி மீண்டும் ஒரு 15 என கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் இவர்கள் வழங்கும் 30 மதிப்பெண்கள் தகுதி உடையோர் பலரைப் பின்னுக்குத் தள்ளும்.4 எனவே, போட்டித் தேர்வு மதிப்பெண்கள், தேசிய / மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி, முனைவர் பட்டம், ஆய்வு அனுபவம், அரசு / அரசு உதவிபெறும் / தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் அனுபவம் உள்ளிட்டவற்றிற்குத் தனி மதிப்பெண்கள் கொடுத்து உதவிப் பேராசிரியர்களைத் தேர்வுசெய்வதே நியாயமானதாக அமையும்.

அரசு இனி என்ன செய்யலாம்? 

கௌரவ விரிவுரையாளர்கள் எனும் பணியே இல்லாமலாக வேண்டும் எனும் கனவு மெச்சத்தக்கதுதான். அரசின் நிதிநிலை, பணியில் இருக்கும் ஆசிரியர் இடமாறுதல் பெற்றுச் செல்லுதல் அல்லது திடீர் உயிரிழப்பு ஏற்படல் உள்ளிட்ட காரணங்களால் நிலுவையில் இருக்கும் / உருவாகும் காலியிடங்களை நிரப்ப கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம். அத்தகைய நியமனங்கள் ஒருபோதும் நிரந்தரப் பணி வாய்ப்பை வழங்காது என்கிற தகவல் அவர்களின் பணி நியமன உத்தரவிலேயே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக / கல்லூரி அளவில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்கும் போட்டித் தேர்வுகள் நடத்தலாம். மேற்சொன்ன வெளிப்படையான மதிப்பெண் முறைகளைப் பின்பற்றப்படலாம். மிக முக்கியமாக ஊதியம், பணிநேரம் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டல்கள் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வால் வெளியிடப்படும் முடிவுகளில் உள்ள தேர்வர்களின் தரவரிசை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுக்குச் செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உருவாகும் இத்தகைய திடீர் காலிப் பணியிடங்களை அத்தகைய தரப் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டே நிரப்பலாம். இது மேற்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களை நியமிப்பதை குறைக்கும்; கூடவே அரசும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை காலி இடங்களைப் பொறுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தலாம். இந்தியாவில் இது புதிதும் அல்ல, கேரளம் இதைத்தான் செய்கிறது.

கேரளம் இன்னொன்றாயும் செய்திருக்கிறது: தனியார் கல்வி நிறுவங்னகளை முறைப்படுத்தும் சட்டம், ‘Kerala Self Financing College Teaching and Non-teaching Employees’ (Appointment and Conditions of Service Ordinance, 2021 (38 of 2021). இது தனியார் கல்வி நிறுவனப் பணியாள்களுக்கான கண்ணியமான சம்பளம், பணிப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. இந்தச் சட்டத்தை மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கென ஒரு கண்ணியமான பணிச்சூழல் உருவாகாத வரையில் நமது மனிதவளம் சிறக்காது.

சான்றுகள்:

  1. கல்லூரிக் காலிப் பணியிடம், குழப்பங்களுக்கு முடிவு வருமா? - அ.ப.அருண்கண்ணன், இந்து தமிழ் திசை, 29.05.2024. 
  2. Government announces salary hike for guest lecturers, health insurance and retirement benefit https://www.thehindu.com/news/national/karnataka/government-announces-salary-hike-for-guest-lecturers-health-insurance-and-retirement-benefit/article67686691.ece
  3. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் - பேரா.இரா.முரளி, புதிய ஆசிரியன், ஜூன் 2024.
  4. Assistant professor recruitment notification https://trb.tn.gov.in/admin/pdf/7049124776AP%20Notification%20Final%2013.03.2024.pdf
  5. நவீனக் கொத்தடிமைகளா தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள்? - வெ. நீலகண்டன், அனந்த விகடன், 05.06.2024.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஆசிரியர்களும் கையூட்டும்
ஆசிரியர்களும் கையூட்டும்: ஓர் எதிர்வினை
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3






இயந்திரமயம்புவியரசியல்சாதனைகள்அம்ரீந்தர் சிங்சர்க்கரை நோய்கே.சந்திரசகேர ராவ்இளமையில் நீரிழிவுஅடுத்த கட்டத்துக்குச் செல்கிறது ‘அருஞ்சொல்’தினமலர்நிர்வாகம்போக்குவரத்து கழகங்கள்பொதுமுடக்கம்இந்திய விடுதலைஏழ்மைமாயக் குடமுருட்டி: பாமணியாறுபுராஸ்டேட் சுரப்பிசந்திர கிருஷ்ணா கட்டுரைஅடுத்த தொகுப்புகாங்கோஉங்கள் சம்பளம்வேளாண் நிதிநிலை அறிக்கைகுக்கூதம்பி வா! தலைமையேற்க வா!கீர்த்தனை இலக்கியம்ஐபிஎல்பின்லாந்து கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணிஉழவர் சந்தைகள்நம்பிக்கையில்லாத் தீர்மானம்சிறிய மாநிலம்ஒளி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!