கட்டுரை, அரசியல், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு
ராஜாஜியும் மூக்குக்கண்ணாடி திட்டமும்
வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
பெயரில் 'சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி' என்று வளம் ஒட்டிக்கொண்டிருந்தாலும், மிகுந்த வறுமையான சூழலிலேயே ராஜாஜியின் வீடு இருந்தது. பஞ்ச காலத்தின் ஏழ்மையும் சமூகத்தைப் பீடித்திருந்த காலம் அது. சொற்ப வருவாயில் குடும்பம் நடத்தினார் ராஜாஜியின் தந்தை சக்கரவர்த்தி வெங்கட்ராய ஐயங்கார். மனிதர் கறார் என்பதோடு மகா கஞ்சத்தனமும் மிக்கவர்.
சிறு பிராயத்திலேயே ராஜாஜிக்குப் பார்வைக் குறைபாடு இருந்திருக்கிறது. பேச்சுத்திறன் குறைபாடு, கேட்புத்திறன் குறைபாடுபோல உடனடியாகக் கவனத்துக்கு வரும் குறைபாடு இல்லை இது. பிள்ளைகள் அல்லது பெற்றோர் பலரே தாமதமாகத்தான் பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலச் சூழலை விவரிக்க வேண்டாம்.
ராஜாஜி அப்படி உணர்ந்த பின் தன் தந்தையாரிடம் சொல்லியிருக்கிறார். தந்தையார் அதைப் பொருட்படுத்தவில்லை. வறுமையும் இந்த அலட்சியத்துக்குக் காரணம் என்றாலும், இவர் சும்மா சொல்கிறார் என்கிற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கிறது. தந்தையாரின் இந்த அவநம்பிக்கை ராஜாஜியை வேதனைக்குள் தள்ளியிருக்கிறது. மிகுந்த சிரமத்துடனே அவர் படித்திருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து, பள்ளியில் ஆசிரியர்கள் ராஜாஜியின் தந்தையை அழைத்துக் கூறி நிலைமையின் தீவிரத்தை அவருக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்போது கண் கடும் பாதிப்பை அடைந்த நிலையில் இருந்திருக்கிறார் ராஜாஜி. கண்ணாடி போட்ட பிறகுதான் வாழ்நாளில் முதல் முறையாக நட்சத்திரங்களைக் கண்டேன் என்று ஓரிடத்தில் அவர் சொல்வார்.
¶
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள 'சிறாருக்கான விலையில்லா மூக்குக்கண்ணாடி திட்ட அறிவிப்பைப் பார்த்தபோது எனக்கு ராஜாஜியின் நினைவு வந்தது: எத்தனை லட்சம் ராஜாஜிகளின் துயரை இது தீர்க்கும்; எவ்வளவு பேருக்குப் புதிய கண்ணாடிகள் நட்சத்திரங்களைக் காட்டும்!
பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களைக் கண்டறிந்து இப்படி எதிர்பார்க்கப்படும் 2 லட்சம் பேருக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் இது. பொதுச் சமூகத்தில் கற்பனைசெய்ய வேண்டிய நலத்திட்டங்கள் இத்தகையவை. நம்மில் பலரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்தில் இருக்கின்றனர் இப்படிபட்ட பாதிப்புகளில் இருப்பவர்கள். அப்படிப்பட்டோரைத் தேடிச் செல்லும் தமிழக அரசின் இந்தத் திட்டமும் அக்கறையும் பெரும் பாராட்டுக்குரியது.
எந்த 'இலவசமும்' சமூகத்தில் அதற்குரிய தேவையையும் பயனாளிகளையும் கொண்டிருக்கிறது!
- சமஸ், ஃபேஸ்புக் குறிப்பு, 13.11.2022
![](https://www.arunchol.com/images/like.png)
2
![](https://www.arunchol.com/images/love.png)
1
![](https://www.arunchol.com/images/care.png)
![](https://www.arunchol.com/images/haha.png)
![](https://www.arunchol.com/images/wow.png)
![](https://www.arunchol.com/images/sad.png)
![](https://www.arunchol.com/images/angry.png)
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Abi 2 years ago
ஐயா, கண்ணாடி உடனடியாக பயனாளி களுக்கு வழங்க படுவது இல்லை.. குறைந்தது 6 மாதம் எடுத்து கொள்வார்கள்.. Pari சோதனை கண்ணாடி kodupatharkul eye power change ஆகும்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.