கட்டுரை, கேள்வி நீங்கள் - பதில் சமஸ், சமஸ் 3 நிமிட வாசிப்பு

தமிழர்களிடம் ஏன் இவ்வளவு இனவெறி?

வாசகர்
30 May 2022, 5:00 am
3

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம். வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு பணியாற்றுவோர் நகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று ராமேஸ்வரம் நகராட்சி விடுத்த அறிக்கையைக் கவனித்தீர்களா? சமூகவலைதளங்களில் அது பேசுபொருள் ஆகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் சீமான்கூட இங்கேயே வந்து தங்கிவிடும் வெளிமாநிலத்தவர்கள் சம்பந்தமாகப் பேசியிருந்தார். இது சரியா? ஏன் நாளுக்கு நாள் தமிழர்கள் இப்படி குறுகிய மனப்பான்மை கொண்ட இனவெறியர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்?

- சுரேஷ், புதுக்கோட்டை

அன்புள்ள சுரேஷ்,

நீங்கள் மேலோட்டமான பார்வையுடன் தீவிரமான ஒரு விவகாரத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். இது உங்கள் சொந்த ஊரிலேயே உங்களை அடிமையாக்கிவிடும் அபாயம் தொடர்பிலானது. இனவியம் அடிப்படையிலானது இல்லை; உள்ளூரியம் அடிப்படையிலானது.  

இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி என்றால், அதன் ஒவ்வோர் அம்சத்திலும் அந்தக் கூட்டாட்சித்தன்மை பிரதிபலிக்க வேண்டும். உரிமைகளின் தாய் என்றழைக்கப்படும் குடியுரிமை எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு பிரஜையின் குடியுரிமையை டெல்லி மட்டும் எப்படித் தீர்மானிக்க முடியும்? மாநில அரசுக்கு மட்டும் இல்லை; உள்ளூர் அரசுக்கும் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் பங்கு இருக்க வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய அரசமைப்பு அப்படி இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், குடியுரிமையை மாநிலங்களுடனும், உள்ளாட்சி நிர்வாகத்துடனும் பகிர்ந்துகொள்ள அதிகாரம் அளிக்கும் ஓர் அரசமைப்பை நாம் சிந்திக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஐஏ) தொடர்பில் சில மாநில அரசுகள் சட்டமன்றங்களில் கொண்டுவந்த தீர்மானங்களைக் குடியுரிமை அதிகாரத்தில் மாநிலங்களும் பங்களிப்பதற்கான அபிலாஷையின் வெளிப்பாடாகவே நான் பார்த்தேன். 

இன்று ராமேஸ்வரம் நகராட்சி கொடுத்திருக்கும் அறிவிப்பானது, அதிகாரம் ஏதுமற்ற நிர்வாக நிமித்தமான சாதாரண அறிக்கை. ஆனால், ராமேஸ்வரம் நகராட்சி அங்கீகரித்தால்தான் ஒருவர் ராமேஸ்வரத்தின் பிரஜையாக முடியும் என்ற அதிகாரம் ராமேஸ்வரம் மக்களுக்கு இருக்கும் சூழல் உருவாக வேண்டும். சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள நடைமுறை பாணியையே இங்கே நான் பேசுகிறேன்; இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே காஷ்மீரில் இன்றைய பாஜக அரசு அங்கீகரித்திருக்கும் முறையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் என்றும்கூட இதைச் சொல்லலாம்.

தமிழர்கள் இனவெறி கொண்டவர்கள், குறுகிய பார்வையினர் என்பதெல்லாம் வசைகள். தமிழர்கள் இந்தியாவில் ஏனைய பல சமூகங்களுடன் ஒப்பிட இந்த விவகாரத்தில் இன்னும் கண் விழிக்கவே இல்லை என்பதே உண்மை. 

இதுபற்றி ‘இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை’ என்று நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். வாசியுங்கள். முழுப் புரிதல் கிடைக்கும்.

தொடர்புடைய கட்டுரை

இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Navendhiran V   2 years ago

வணக்கம். இத்தகைய சுற்றறிக்கை அனுப்ப வேண்டியதும் அவை தொடர்பான தகவல் சேகரிக்க வேண்டியதும் காவல் துறையின் கடைமை! நகராட்சிகள் இத்தகைய சுற்றறிக்கை வெளியிடுவது சட்டத்திற்குட்பட்டதா? தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இல் அதற்கான சட்ட வழிமுறைகள் ஏதுமில்லை!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

///புதிதாகக் குடியேறிய நகரிலேயே ஒருவேளை நிரந்தரமாக அவர் வசிக்க முடிவெடுத்தால், அந்த மாநிலத்தில் உள்ளூராருக்கு இணையாக அந்த ஊரின் ஓட்டுரிமையையும் நிலவுரிமையையும் பெறுவதற்கு ஒரு கால இடைவெளி அங்கு தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்; படிப்படியாக நகரின் நிரந்தரக் குடியுரிமையைச் சம்பந்தப்பட்ட மாநிலமும், உள்ளாட்சியும் அவருக்கு அளிக்க வேண்டும்./// அயல் மாநிலத்திற்கு பணி மாறுதல் பெற்ற ஒருவர் அங்கு ஒரு வீடு வாங்க விரும்பினால், அதற்கு உள்ளூர் நகராட்ச்சி, மாநில அரசு ’அனுமதி’ அளிக்க வேண்டுமா ? இது இந்திய அரசியல் சட்டத்திற்கும், சம உரிமைகளுக்கும் முரணானது. தேவையற்ற, எதிர்மறையான விசியம். தொழில்முனைவோர்கள் பலர் அயல் மாநிலங்களில் வீடு, நிலம் வாங்கு தொழில் தொடங்குவது இயல்பு. அதற்கும் தடையாக இருக்கும் impractical, narrow provincialism. ///ஒரு கல்லூரியிலோ, அலுவலகத்திலோ இடம் கோரி போட்டியில் நிற்கும் இருவரில் உள்ளூராருக்கு நூற்றுக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கும் சலுகையை ஓர் உதாரணமாக இதற்குச் சொல்லலாம்.// இது ஏராளமான குழப்பங்கள், சிக்கல்கள், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். கிண்டி பொறியியல் கல்லூரியில், MMCயில் சென்னைவாசிகளுக்கு ’முன்னுரிமை’ அளிப்பது, இதர மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நீதிமன்றங்கள் இதை தடை செய்து விடும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

மிக சரியான பதில்...வட இந்தியர்கள் யாரும் ஊருக்குள் வர கூடாது, வேலை செய்ய கூடாது என்று யாரும் சொல்லவில்லை..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அமெரிக்கப் பயணம்வேலைவாய்ப்புகள்இரண்டாம்தர மாநிலம்இஸ்லாமியர்கள்மிஸோரம்வடிவேலுஅவதூறுகளுக்குச் சுதந்திரம்காய்ச்சல்பிரதமர்சூலகங்கள்பிரணாய் ராய்நிகர கடன் உச்ச வரம்புசமஸ் கி.ரா.போக்குவரத்து நெரிசல்நெல்லி பிளைஉடல் நலம்பிரதமர் மோடிமணிப்பூர் முதல்வர்இ-ஷ்ரம்ஹேக்கிங்மாநில முதல்வர்சியாட்டிகாசொற்கள்பேராசிரியர் கல்யாணி பேட்டிகாப்பியம்அரசியல் எழுச்சிபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அருஞ்சொல்75வது ஆண்டுபாண்டியன்கும்பல் ஆட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!