கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

வாஜ்பாய் போன்று தோற்றிருக்க வேண்டியவர் மோடி

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
16 Jun 2024, 5:00 am
0

மோடி ஏன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்? தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படிப் பெரும்பான்மை பெற்றது? பாஜக ஏன் ஒட்டுமொத்தமாகத் தோல்வி அடையவில்லை?

தேர்தல் முடிவு பற்றிய அலசல் என்ற பெயரில் தவறான பல கதைகள் சொல்லப்படுவதால், மேலே சொன்ன கேள்விகளை நாம் கேட்காமலேயே இருக்கிறோம். ஊடகங்கள் இன்னமும் தவறான கோணங்களிலேயே தேர்தல் முடிவை அலசுகின்றன.

பாஜக எப்படி எதிர்பாராத வகையில் இப்படி தனிப் பெரும்பான்மையை இழந்தது என்றே கேட்கின்றனர்; கேள்வியே தவறு.

பாஜக தோற்றதுதான் அவர்களுக்கு வியப்பாகத் தெரிகிறது. மோசமான, மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி கொடுக்காத, ஆணவம் பிடித்த அரசு ஆட்சியை இழப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை; இந்த வியப்புச் செய்தி ஊடகங்களின் திரிபு வேலை. இப்படிக் கேள்விக் கேட்டு அதற்கு விடை காண முயல்வதன் நோக்கமே உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதித்துவிடாமல் திசைதிருப்பத்தான்.

ஆட்சி மாற்றம் தொடர்பான புழுதி அடங்கிய பிறகு, உண்மையான பிரச்சினைகள் குறித்த கேள்விகள் எழும், எதிர்நிலைக்கு ஆதரவான குரல்கள் புறப்படும் என்று நம்புவோம்: கேட்கப்பட வேண்டிய கேள்வி, தேர்தல் தோல்வியிலிருந்து பாஜக எப்படி தப்பியது?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கடந்த கால முன்னுதாரணம்

இதற்கும் முன்னால் 2004இல் நடந்த மக்களவைத் தேர்தலுடன் 2024 தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மைகள் புரியும். மக்களிடம் நல்ல பெயரெடுத்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஐந்தாண்டுகளைப் பூர்த்திசெய்த பிறகு நடந்த பொதுத் தேர்தல் அது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பது அவர்களுடைய முழுக்கமாக இருந்தது.

அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளும் தேஜகூ மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்றே கூறின. இருந்தாலும் இறுதி முடிவுகள் அனைவரையும் திகைப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தின - கடந்த வாரத்திய நிகழ்வுகளைப் போல!

நல்ல வேளையாக, லோக்நீதி - சிஎஸ்டிஎஸ் நிறுவனம் 2004இல் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பில் கேட்ட கேள்விகளின் தொகுப்புகள் நம்மிடம் உள்ளன; இந்தத் தேர்தலில் கேட்ட அதே கேள்விகள்தான் பெரும்பாலும் அப்போதும் கேட்கப்பட்டன.

மக்களிடையே 2024இல் மோடிக்கு இருந்த ஆதரவுக்கும் 2004இல் வாஜ்பாய்க்கு இருந்த ஆதரவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பிரதமர் பதவிக்கு உங்களுடைய தேர்வு யார் என்று கேட்டபோது 38% வாக்காளர்கள் வாஜ்பாயைக் குறிப்பிட்டனர், இப்போது 41% பேர் மோடியைக் குறிப்பிட்டுள்ளனர். 2004இல் வாஜ்பாய்க்குப் போட்டியாளர் என்று கருதப்பட்ட சோனியாவுக்கு 26% பேர் ஆதரவு தெரிவித்தனர், இந்த முறை ராகுல் காந்திக்கு 27% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

மோடியும் வாஜ்பாயும்

வாஜ்பாய் அரசின் செயல்பாடு திருப்தி தருகிறது என்று கூறியவர்கள், மோடி ஆட்சியால் திருப்தி என்கிறவர்களைவிட நூலிழை அதிகம். திருப்தி இல்லை என்றவர்களுடைய சதவீதத்தைக் கழித்தால் வாஜ்பாய்க்கு 29% ஆதரவும் மோடிக்கு 23% ஆதரவும் இருந்துள்ளது. 

இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்ற கேள்விக்கு வாஜ்பாய் ஆட்சி தொடர வேண்டும் என்றவர்கள் 48% முதல் 30% வரையிலும், மோடி ஆட்சி தொடர வேண்டும் என்றவர்கள் 46% முதல் 39% வரையிலும் இருந்தனர். இருந்தும் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்.

2004இல் வாக்குக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 230 முதல் 275 வரையில் இடங்கள் கிடைக்கும் என்றன. உண்மையில் கிடைத்தது 181. பாஜக ஆட்சியை இழந்தது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.

அந்த முடிவு 2024இல் ஏன் ஏற்படவில்லை? இதற்கு தகுந்த பதில் என்றால், தொடக்கத்திலிருந்தே தேஜகூ வலுவாக இருந்தது என்பதுதான். வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் 23 கட்சிகள் இருந்தன. 1999 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 182 தொகுதிகள் கிடைத்தன. 2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜக 44 தொகுதிகளை இழந்தது. இது போன்றே மோடி தலைமையில் 303 ஆக இருந்த பாஜக இப்போது  240க்குக் குறைந்துவிட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தைவிட இது குறைவு அல்ல.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

1% ஓட்டுகள் மாறியிருந்தால்…

2024 தேர்தல் முடிவும் மாறியிருக்க வாய்ப்பு இருந்ததா? இந்தத் தேர்தலில் பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்க முடிந்திருக்குமா?

இப்படித் தொடர்ந்து தவறான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்காமல், தேர்தல் முடிவைப் புதிய கண் கொண்டு ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும். மோடி மிகவும் சிரமப்பட்டுத்தான் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்தத் தேர்தல் முடிவில் தேஜகூ அணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த தொகுதிகளையே ஆரம்பப் புள்ளியாகக் கொள்வோம். பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்குகள் 1% கூடுதலாகத் திரும்பியிருந்தால் அது மேலும் 18 தொகுதிகளை இழந்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வளவு தொகுதிகளை இழந்ததோ அதே எண்ணிக்கையில் ‘இந்தியா’ கூட்டணிக்கு தொகுதிகள் அதிகம் கிடைத்திருக்கும்.

இந்த எதிர் அலையே 1.5% ஆக இருந்திருந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே மொத்தமாக 261 தொகுதிகள்தான் - அதாவது பெரும்பான்மைக்கும் குறைவு - கிடைத்திருக்கும். இந்தியா கூட்டணிக்கு 263 தொகுதிகள் கிடைத்திருக்கும். மேலும் அரை சதவீத வாக்குகள் பாஜக கூட்டணிக்கு எதிராகத் திரும்பியிருந்தால், அதற்கு மொத்தம் 246 தொகுதிகள்தான் கிடைத்திருக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கு 275 தொகுதிகள் கிடைத்திருக்கும்.

பாஜக அணிக்கு எதிராகவும் காங்கிரஸ் அணிக்கு ஆதரவாகவும் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக வாக்கு அலை இருந்திருக்கும் என்பது உண்மை நிலைக்குப் பொருந்தாது.

இந்தி பேசும் மாநிலங்களில்தான் பாஜகவுக்கு எதிராக அலை வலுவாக இருந்தது. அது மட்டும் மேலும் வலுவாக இருந்திருந்தால் பாஜக அதிக தொகுதிகளை இழந்திருக்கும். 2% வாக்குகள் பாஜகவுக்கு எதிராக கூடுதலாக சரிந்திருந்தால் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், வங்கம், பிஹார், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் அதிக தொகுதிகளை இழந்து பாஜக கூட்டணியின் மொத்தமே 260 தொகுதிகளாக மட்டுமே இருந்திருக்கும். அப்போது பாஜகவுக்கு மட்டும் 214 தொகுதிகள்தான் கிடைத்திருக்கும். அதாவது, மேலும் 1% வாக்குகள் எதிராகத் திரும்பியிருந்தாலே இந்த நிலைமை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

நினைவில் வையுங்கள்: கடைசியாக கிடைத்த வாக்குகளைவிட, மேலும் 1% வாக்குகளை இழந்திருந்தால் மோடி தலைமையிலான கட்சி, எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருக்கும்.

மீண்டும் மோடி - யார் காரணம்?

இப்போது நமக்கும் எதிர்கால வரலாற்று ஆசிரியர்களுக்குமான கேள்வி என்னவென்றால் அந்த 1% வாக்கு எதிராகத் திரும்பிவிடாமல் தடுத்தது யார் அல்லது எது? பாஜக ஆட்சியை இழந்துவிடாமல் அதற்கு உதவியது எது? நமக்கெல்லாம் தெரியாத ஒரு ரகசியம் பாஜக தலைவர்களுக்கு மட்டும் தெரிந்திருந்ததா? அல்லது நாம் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு தடுக்கப்பட்டதா?

பாஜகவைக் காப்பாற்றியது அது அமைத்த கூட்டணிதான். பிஹாரில் நிதீஷ் குமாருடனும் உத்தர பிரதேசத்தில் ஜெயந்த் சௌதரியுடனும் பாஜக ஏன் வினோத கூட்டணி அமைத்தது? சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வேண்டாம் என்று இருந்த பாஜக, ஏன் திடீரென முடிவை மாற்றிக்கொண்டது? பிஹாரிலும் மஹாராஷ்டிரத்திலும் கூட்டணிக்கு வரத் தயாராக இருந்தவர்களையெல்லாம் பாஜக சேர்த்துக்கொண்டது ஏன்?

பதில்: கூட்டணிக் கட்சிகள், மொத்தம் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதல்லாமல் பாஜகவே ஆந்திர பிரதேசம், பிஹார், மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் கூடுதலாக 10 தொகுதிகளை வெல்லக் காரணமாக இருந்து உதவியுள்ளன.

‘இந்தியா’ அணியில் நடந்தது என்ன என்றால், வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் ஏற்பட்ட பிளவால் 3 மக்களவைத் தொகுதிகளை இழந்தது; மஹாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான கட்சி தனித்துப் போட்டியிட்டதால் 4 தொகுதிகளில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, தேஜகூ கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது, ஹைதராபாத்தில் ஒவைசியின் கட்சி ஒரு தொகுதியை ‘இந்தியா’ கூட்டணிக்குக் கிடைக்காமல் பறித்துக்கொண்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

ஊடகங்களும் பொறுப்பாளி

இன்னொன்றையும் கவனியுங்கள். நாட்டின் எல்லாச் செய்தி ஊடகங்களும் நடுநிலைமையுடன் தேர்தல் செய்திகளையும் மக்களுடைய கருத்துகளையும் வெளியிட்டிருந்தால், தேர்தல் முடிவு நிச்சயம் மாறியிருக்கும். வாக்காளர்களில் 83% பேர் வீட்டில் தொலைக்காட்சி வைத்துள்ளனர், 66% பேர் தினமும் செய்திகளை தொலைக்காட்சிகளிலிருந்துதான் தெரிந்துகொள்கின்றனர். சமூக ஊடகங்களால் 47% பேரைத்தான் சென்றடைய முடிகிறது.

ஊடகங்களில் செய்திகளைக் கேட்பவர்கள் ஏதாவதொரு மோடி ஆதரவு தொலைக்காட்சியின் பெயரைத் தெரிவிக்கின்றனர். தொலைக்காட்சிகள் மோடி ஆட்சியின் உண்மையான தன்மை பற்றிப் பேசியிருந்தால், ஆளுங்கட்சிக்கு ஊதுகுழலாக மாறாமல் இருந்திருந்தால் தேர்தல் முடிவு மாறியிருக்கும். இந்தத் தேர்தல் பாஜகவுக்குச் சாதகமானது அல்ல என்று கூறியிருந்தால்கூட நிலைமை மாறியிருக்கும்.

அரசின் ஊடகப் பிரச்சாரத்தைக் கேட்கும் 66 பேரில் ஒருவர் தங்களுடைய முடிவை மாற்றிக்கொண்டிருந்தால்கூட, பிரதமராக இன்று பதவி வகிப்பவர் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் பதவியேற்றிருக்க முடியும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






ஆந்திரம்பால் சக்கரியாஅதிநாயக பிம்பமான நாயகன்சமஸ் - அதானிமுதல் பதிப்புவீர சிவாஜிதலித் அரசியல்கோளாறுகள்ஆர்.எஸ்.எஸ்.அதிகரிக்கும் மன அழுத்தம்வேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?பொங்கல் கொண்டாட்டம்பூட்டல் வேதிவினைசுயாட்சித்தன்மைபட்டியல் இனத்தவர்கள்மூவேந்தர்கள் அரிமானம்சத்துணவுகழிவுதஞ்சைமதச்சார்பற்ற மாணவரை உருவாக்காது பாடப் புத்தகங்கள்!மாநிலங்களவையின் முக்கியத்துவம்தான் என்ன?ராம்மனோகர் லோகியாகுறுங்காவியம்அரசமைப்புச் சட்டப் பிரிவு 370எளியவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டுடிம் பார்க்ஸ்சோடாரிச்சர்ட் அட்டன்பரோசத்தான உணவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!