கட்டுரை, அரசியல், கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவ சுவாமிஜியா விவேகானந்தர்?

யோகேந்திர யாதவ்
28 Oct 2023, 5:00 am
1

ராமகிருஷ்ண மடாலயத்தை நிறுவிய சுவாமி  விவேகானந்தரின் பாரம்பரியத்துக்கு உரிமை கொண்டாடுவது சங்கப் பரிவாரங்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. சராசரி இந்தியர் அவரை காவியுடை தரித்த சன்னியாசியாகத்தான் அறிந்திருக்கிறார். அவர்களுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும் என்றுதான் ஆர்எஸ்எஸ் இயக்கமும் விரும்பும்.

நம்முடைய குடியரசை மீண்டும் கைப்பற்றத்துடிக்கும் சக்திகளுக்குத் துணை போகிறவர்தானா விவேகானந்தர்? இந்து மத மேலாதிக்க சித்தாந்தத்தை ஆதரித்தவரா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு மூதாதையரா, ‘இந்துத்துவா’ என்று பரிவாரங்கள் கூறும் கருத்துகளைக் கொண்டவரா அவர்? 

புதிய புத்தகம்  

சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம் இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. ‘விவேகானந்தர்: சுதந்திரக் கருத்துகளின் மெய்யியலாளர்’ (Vivekananda: The Philosopher of Freedom) என்ற அந்தப் புத்தகத்தை வி.கோவிந்த் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இந்துத்துவர்கள் முன்வைக்கும் அனைத்து அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் எதிரானது விவேகானந்தரின் சிந்தனைகள் என்று 485 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் சான்றுகளுடன் அவர் விவரித்திருக்கிறார்.

கலாச்சார ஊட்டத்தில் வெற்றிடம் 

விவேகானந்தரின் சித்தாந்த மரபைக் கைப்பற்றுவது சங்கப் பரிவாரங்களுக்கு எளிதான செயலாகிவிட்டது. படித்த சராசரி இந்தியனுக்கு விவேகானந்தரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர், சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் தன்னுடைய பேச்சால் அனைவரையும் மயங்க வைத்தவர் என்பது மட்டுமே தெரியும். காவியுடை அணியும் இந்து மத சாமியார்களைப் போலத்தான் அவரும் என்றே நினைக்கின்றனர். அந்தக் காவியுடையே ‘இந்தியன்’ – ‘இந்து’ என்ற வெற்றுப் பெருமையைத் தீவிரமாக எழுப்புகிறது. அவர்களுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கமும் விரும்புகிறது.

துறவிகளுக்கு விதிக்கப்பட்டபடி பிரம்மச்சரியத்தையும் பொருள்களை நாடாமலும் வாழ்ந்த விவேகானந்தர், தொடர்ச்சியாக – அதேசமயம் வெளிப்படையாக - புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர், ஆட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சி உணவை விரும்பி உண்டவர், யோகாசனத்தை உடற்பயிற்சியாக செய்வதை வெறுத்தவர் என்பது சராசரி இந்தியர்களுக்குத் தெரியாது.

புதிது புதிதாகக் கோவில்களைக் கட்ட வேண்டும் என்ற கருத்தை ஏற்காதவர், மக்களுடைய வறுமையையும் பட்டினியையும் போக்க வழிசெய்யாமல் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களால் எரிச்சலுற்றவர். இப்படிப்பட்ட விவேகானந்தர் சங்கப் பரிவாரங்களுக்கு எப்படி லட்சிய சாமியாராக இருக்க முடியும்? 

ஆனாலும், அவர்களால் விவேகானந்தருக்கு சொந்தம் கொண்டாட எப்படி முடிந்தது என்றால் சுதந்திரச் சிந்தனை கொண்ட முற்போக்காளர்கள் விவேகானந்தரின் கருத்துகள் குறித்து அக்கறை காட்டியதே இல்லை அல்லது தீவிரமாக சந்தேகப்பட்டனர். பெரும்பாலும் அவரைப் பற்றி ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தனர் அல்லது வெகு அடக்கமாகவே புகழ்ந்தனர். மதச்சார்பற்ற சக்திகள் அவரை தங்களுடையவர் அல்ல என்று ஒதுக்கியபோதெல்லாம் சங்கப் பரிவாரங்கள் அவரைத் தங்களுடையவராக ஏற்க விரும்பிச் செயல்பட்டன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்து மேலாதிக்கவாதி அல்ல

விவேகானந்தர் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர், அதைப் பின்பற்றியவர், இந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர், உலக சமுதாயத்துக்கு அளிப்பதற்கு இந்த மதம் தன்னிடத்திலே சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்று கருதியவர். அவருடைய காலத்தில் நாட்டை அடிமைப்படுத்திய காலனிய ஆட்சியாளர்களும் ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களும் இந்து மதம் குறித்து ஏளனமாகப் பேசியபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அப்படிச் செய்ததாலேயே அவர் இந்து மேலாதிக்கவாதியாகிவிட மாட்டார்.

ஒரேயொரு சந்தர்ப்பம் தவிர வேறு (கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக ஒருமுறை நிதானமிழந்து பேசியிருக்கிறார்), எப்போதும் பிற மதங்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. ‘தி இமிடேஷன் ஆஃப் கிறைஸ்ட்’ என்ற புத்தகத்தை எப்போதும் எடுத்துச் செல்வார், இயேசு மீது பக்தி கொண்டிருந்தார். இஸ்லாத்தின் மீதும் அவர் வெறுப்பு கொண்டதில்லை.

இந்திய சமூகத்தின் தாழ்ச்சிக்குக் காரணம் அதன் அசமத்துவமும் பிறருடன் கலவாத தனிப்போக்கும்தான், முஸ்லிம் படையெடுப்பாளர்களை இதற்கெல்லாம் குற்றஞ்சாட்டக் கூடாது என்று விவேகானந்தர் வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம் – சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்காக இஸ்லாமிய மதப் பழக்க வழக்கங்களைப் புகழ்ந்திருக்கிறார், அத்வைத கொள்கையை நடைமுறையில் பின்பற்றும் ஒரே மதம் இஸ்லாம்தான் என்று கூறியிருக்கிறார்.

எல்லா மதங்களையும்விட வேதாந்தம்தான் சிறந்தது என்ற விவேகானந்தர் நம்பிக்கை பற்றி என்ன சொல்வது? எல்லா மதங்களையும் அவர் அவற்றின் மெய்யியல் கருத்துகள் அடிப்படையில் படிநிலையாக வரிசைப்படுத்தினார். அதை ‘துவைத’ (இருமை) கொள்கையுடன் தொடங்கினார், ‘விசிஷ்டாத்வைதம்’ (இருமைக் கொள்கையை மேம்படுத்தியது) இறுதியாக ‘அத்வைத’ (இருமை அல்ல) கருத்துடன் முடிக்கிறார். இவைதான் இந்துத்துவத்தின் சாரம் என்கிறார்.

விவேகானந்தர் மிகச் சிறந்த அறிவுஜீவியாக உருவான காலம் அது என்று குறிப்பிடும் மேதானந்தா போன்றவர்கள் முன்வைக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து மதங்களுமே வெவ்வேறு வழிகள்தான் – அது நான்கு யோகங்களிலும் ஒன்று – சத்தியமான பரம்பொருளை அடைவதற்கான மார்க்கங்கள் என்கிறார்.

இந்த விளக்கம்கூட நமக்கு உடன்பாடு இல்லை என்று கருதினாலும் தங்கள் மார்க்கமே சிறந்தது என்று கருதுவதற்காக இந்துவையோ இஸ்லாமியரையோ கிறிஸ்தவரையோ நாம் குறை காண முடியாது. காலனியாதிக்கத்தால் கலாச்சாரத்தின் மீது பெருந்தாக்குதல் நிகழ்ந்தபோது தன்னுடைய இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக ஒரு இந்து அப்படிக் கூறிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்து மெய்யியல் கருத்தின் உன்னதமான அம்சம் எதுவென்றால் எல்லா மதங்களுமே சத்தியத்தை அறிவதை நோக்கித்தான் பயணிக்கின்றன என்பதை ஏற்றது. இதை மத மேலாதிக்கமாகப் பார்ப்பது விசித்திரமான கண்ணோட்டமாகும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

இந்துத்துவமும் சாவர்க்கரும்

யோகேந்திர யாதவ் 17 Aug 2022

சாதி அடிப்படையிலான அசமத்துவத்தைக் கண்டித்தார்

வேண்டுமென்றே கூறப்படாவிட்டாலும் இன்னொரு தவறான புரிதல், ‘விவேகானந்தர் பிராமண மேலாதிக்கத்தை ஆதரித்தார் – சாதிமுறை சரிதான் என்று வாதிட்டார்’ என்பது. அத்தகைய அவதூறுகளை மறுக்க நூலாசிரியர் தனி அத்தியாயத்தை நீண்டதாக எழுதியிருக்கிறார்.  

பன்மைத்துவத்தில் பொதுப்படையான பிரிவாக சாதி பற்றிய குறிப்புகள் இருப்பதாகக் கருதும் விவேகானந்தர், சமூக அமைப்புக்கு சற்றும் நியாயமற்றதும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமான சாதி அமைப்பை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அது ஒழிய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். “இந்தியாவின் வளர்ச்சிக்கு இப்போதைய சாதி வேறுபாடுகள் மிகப் பெரிய தடையாகும். இது மிகவும் குறுகிய மனப்போக்கு கொண்டது, மக்கள் முன்னேற முடியாமல் கட்டுப்படுத்துகிறது, தனித்தனியாகப் பிரிக்கிறது. புதுப்புது எண்ணங்களுக்கு முன்னால் இந்த சாதியமைப்பு தகர்ந்து காணாமல் போய்விடும்” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல ‘பிராமணர்’ என்ற வார்த்தைக்கும் இருவேறு பொருள்பட பேசியிருக்கிறார். இரண்டுமே இந்திய அறிவுஜீவிகளின் மரபுக்குப் பழக்கமானவைதான். நல்ல குணங்களைக் கொண்டவர்களைக் குறிப்பிடுவதாக முதல் பொருளையும், பிறப்பால் மட்டுமே பிராமணர் என்று உரிமை கொண்டாடுவதை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறார்.

முதல் பிரிவினரை ஆதரிக்கிறார், இரண்டாவது பிரிவினரைக் கண்டிக்கிறார் - அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நெறிகளுக்கு ஏற்ப வாழத் தவறியவர்கள் - என்கிறார். “பிராமண சாதி தன்னுடைய கையாலேயே தன்னுடைய சவக்குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறது, அது அப்படித்தான் நடக்க வேண்டும்; மேல் சாதி என்றும் சலுகைகள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும் கருதும் ஒவ்வொரு சாதியும் தங்களுடைய சவக்குழியைத் தாங்களே தோண்டிக் கொள்வதுதான் முதன்மையான கடமையாகக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

விவேகானந்தர் சமூகவியலாளர் அல்லர், இந்த விஷயத்தில் அவருடைய கருத்துகள் தெளிவில்லாமலும் நழுவும் பாணியிலும், முரண்படும் வகையிலும் கூட இருக்கின்றன. அதற்காக அவருடைய உள்நோக்கத்தைச் சந்தேகிப்பது விஷமத்தனமாகும். சோஷலிசம் (சமத்துவம்) குறித்துப் பேசிய முதல் தொகுதி இந்தியர்களில் – முதலாமவர் அல்ல என்றாலும் – அவர் முக்கியமானவர். லண்டனில் வசித்த சமத்துவக் கவிஞர் எட்வர்ட் கார்பென்டருடனும், பாரீஸ் நகரில் வாழ்ந்த சிந்தனையாளர் (அனார்க்கிஸ்ட்) பீட்டர் குரோபோட்கினுடனும் தொடர்பில் இருந்தார்.

விவேகானந்தரின் ஆக்கங்களைப் படிக்கும் எவராலும் அவருக்கிருந்த உயர்ந்த சமத்துவ நோக்குகளைக் கவனிக்காமல் புறந்தள்ளிவிட முடியாது. ஆண் – பெண் பேதம் கூடாது என்று வலியுறுத்திய முதல் தலைமுறை பாலின சமத்துவவாதிகளில் அவர் முக்கியமானவர். பெண்களுக்கு கல்வி அவசியம், அவர்களுக்கு வாக்குரிமையும் வேண்டும் என்று வலியுறுத்திய விவேகானந்தர், சாதி – மத அடிப்படையில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.

தற்செயலாக நடைபெறும் விபத்தைப்போல உயர் சாதியில் பிறந்துவிட்டவர்கள், மற்றவர்களை நடத்தும் விதத்தையும் அவர்களுக்கு இழைக்கும் அநீதிகளையும் அவர் தொடர்ந்து எதிர்த்தார் என்பதே உண்மை. அவரைப் பொருத்தவரை சாதி என்பது சமூகத்தில் ஏற்பட்ட அமைப்புதானே தவிர, அதற்கு மத முக்கியத்துவம் கிடையாது எனவே இந்துத்துவத்துக்கு சாதி அவசியமில்லை என்றே கூறினார்.

விவேகானந்தரின் கருத்து நாராயண குரு கூறியதற்கு நெருக்கமாகவும் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியதற்கு எதிராகவும் இருப்பதைப் போலத் தோன்றும். அதனாலேயே அவர் சாதியை ஆதரித்தார் என்றோ சாதி அநீதியைக் கண்டுகொள்ளாதவர் என்றோ கூறிவிட முடியாது. அம்பேத்கர் சகாப்தத்துக்குப் பிறகு சாதி குறித்து நாம் விவாதிக்கும் விதத்தில் விவேகானந்தர் விவாதித்திருக்கவில்லை என்று நாம் அவரைக் குறை கூற முடியாது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்

நிகில் மேனன் 19 Aug 2022

சித்தாந்த ஆயுதம், வழிகாட்டி

சங்கப் பரிவாரங்களைத் தாக்க விவேகானந்தர் சக்திவாய்ந்த ஆயுதம் என்பதில் ஐயமே இல்லை. அவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் சில தேவைகளுக்கு மட்டும் அவரை ஆயுதமாக சங்க பரிவாரங்கள் பயன்படுத்துவது பரிதாபகரமானது.

விவேகானந்தர் விட்டுச் சென்ற பாரம்பரியம் அகமும் – புறமும் ஞான ஒளியேற்றக்கூடியது. நம்முடைய பாரம்பரியமிக்க குடியரசை நாம் மீண்டும் மீட்க விவேகானந்தரால் உதவ முடியும், நாம் மட்டும் நம்முடைய குடியரசின் ஆன்மிக, கலாச்சாரங்களுக்கான பொருளை மீட்டுருவாக்க முடிந்தால். புதிய இந்தியக் குடியரசை அமைக்க அது வேதாந்த வழியிலான அணுகுமுறையாக இருக்குமோ?

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது?
மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்
இந்துத்துவமும் சாவர்க்கரும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   1 year ago

"அவரைப் பொருத்தவரை சாதி என்பது சமூகத்தில் ஏற்பட்ட அமைப்புதானே தவிர, அதற்கு மத முக்கியத்துவம் கிடையாது"

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மத அரசியல்பிரதமர் நாற்காலிபுலப்ரே பாலகிருஷ்ணன் கட்டுரைநூற்றாண்டுசட்டப்பூர்வ அங்கீகாரம்சவிதா அம்பேத்கர் அருஞ்சொல்ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?கலவிபெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரியா?தேர்தல் கணிப்புகொங்காடைசோராதாளித்தல்மதிப்பீடுவலுவான கட்டமைப்புஎல்.ஆர்.சங்கர் கட்டுரைதமிழ் விக்கிகு.அழகிரிசாமிஅருமண் தனிமம்Tiruppurமுலாயம் சிங் யாதவ்: ஒரு சகாப்தம்காஷ்மீரிபெரியாரின் இறுதியுரைநீதியரசர் எஸ்.அப்துல் நசீர்வயற்களம்தில்லைகட்டுமான விதிமுறைகள்காட்டுக்கோழிவயிற்றுப் புற்றுநோய்இணையச் சேவை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!