கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

வலிப்பு வருவது ஏன்?

கு.கணேசன்
28 Jan 2024, 5:00 am
0

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’ எனத் தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடேயே இருக்க வேண்டியது அவசியம்.

எது வலிப்பு? எது வலிப்பு நோய்?

‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிக காய்ச்சல், ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழிய சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits / Seizures / Convulsions). ஒருவருக்கு இரண்டுமுறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

எப்படி ஏற்படுகிறது? 

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது.

அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம். பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தலைவலி – தப்பிப்பது எப்படி?

கு.கணேசன் 05 Jun 2022

என்ன காரணம்?

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளையில் வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக்கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால் பிரசவ காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும்.

குழந்தைகளுக்கு வலிப்பு!

பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத் தொற்றுநோய்கள், பிரசவத்தின்போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. இவர்களின் ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும்.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சைமுறை மாறுவது மருத்துவ நியதி.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Dec 2023

முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!

பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற ‘அலார’ அறிகுறிகள் தோன்றலாம். அவை:

  • திடீர் தலைவலி, உடல் சோர்வு.
  • குழப்பமான மனநிலை.
  • பதட்டம், பயம், வியர்த்தல்.
  • காதில் மாயக் குரல் கேட்பது.
  • கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை.
  • உடலில் மதமதப்பு.
  • நடை தடுமாற்றம்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது. அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:

  • அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.
  • சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
  • மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
  • அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
  • மூக்குக் கண்ணாடி, செயற்கைப் பல் செட்டை அகற்றிவிடுங்கள்.
  • வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.
  • ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அதில் ஆபத்து அதிகம். உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுங்கள். பின்னர் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து தரும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

என்ன செய்யக் கூடாது?

  • அவரைச் சுற்றி கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
  • வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
  • வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.
  • முழு நினைவு வந்ததை உறுதிசெய்துகொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
  • வலிப்பு ஏற்படும்போது அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.
  • மூக்கில் வெங்காயச் சாற்றை ஊதுவதும் கூடாது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மயக்கம் வருவது ஏன்?

கு.கணேசன் 07 Jan 2024

என்ன பரிசோதனை?

வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈஈஜி, ‘வீடியோ ஈஈஜி’ சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் முதலியவற்றைச் செய்து வலிப்பு நோய்க்குக் காரணம் புரிந்து, வலிப்பின் வகை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்.

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்துவிடலாம். நோயாளியின் நோய் நிலைமையைப் பொறுத்து மாத்திரைகளை நிறுத்திக்கொள்ளவும் வழி உண்டு. அதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவை. மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கானச் சிகிச்சையில் இதுதான் முக்கியம்.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவைச் சிகிச்சை’ தற்போது உள்ளது. இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.

குழந்தைகளுக்கு வலிப்பைத் தடுப்பது எப்படி?

கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பது, மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது, காய்ச்சல் வந்தால் உடனடியாக காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது, காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத்துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் காய்ச்சல் உள்ள குழந்தையைப் படுக்க வைப்பது ஆகிய முதலுதவிகளை உடனே செய்வது போன்றவற்றால் காய்ச்சல் வலிப்பைத் தடுத்துவிடலாம். வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன்மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்துவிடலாம்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

மது என்ன செய்யும்?

கு.கணேசன் 27 Mar 2022

எச்சரிக்கைகள்!

  • வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங்களில் குளிப்பதையும், இவற்றின் அருகே விளையாடுவதையும் அனுமதிக்கக் கூடாது.
  • வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக் கூடாது. அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது.
  • வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்துவிட்டது என்றாலும், அது நினைவுக்கு வந்ததும் உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
  • வேறு ஏதேனும் நோய்க்காக சிகிச்சை எடுக்கும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தலைவலி – தப்பிப்பது எப்படி?
சைனஸ் தலைவலிக்குத் தீர்வு என்ன?
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
மது என்ன செய்யும்?
களைப்பு ஏற்படுவது ஏன்?
மயக்கம் வருவது ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2






ராஜ்நாத் சிங்குடியரசுத் தலைவர் தேர்தல்பெருமாள் முருகன் கம்ப ராமாயணம் கட்டுரைவிசுவ இந்து பரிஷத்அகரம்மறுசீரமைப்புஎதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்திசட்டமன்றக் கூட்டத் தொடர்நீட் மசோதாஜூலியஸ் நைரேரேகோலார்காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்பத்திரிகை சுதந்திரம்கற்றல்வர்க்க பிளவுமதுகர் தத்தாத்ரேய தேவரஸ்சமஸ் உரைஆராய்ச்சிகலாச்சாரச் சிக்கல்பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்நீதிபதிகள் நியமனம்இந்திய மக்கள்தொகை தென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுஅரசியல்வாதிமோடி அரசாங்கம்ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?கலைச்சொற்கள்எடை குறைப்புபல்வகை மாதிரிகள்வருமான வரி விலக்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!