கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன்?

கு.கணேசன்
14 Jan 2024, 5:00 am
0

நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவுமுறைகளாலும் அவசரகதியிலான வாழ்க்கைமுறைகளாலும் ‘வாய்நாற்றம்’ (Halitosis) என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது.

என்ன காரணம்?

பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய்நாற்றத்துக்குப் பிரதான காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள். 

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய்நாற்றத்துக்கு ஏற்பாடு செய்கின்றன. எப்படி?  உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் இந்த உணவுப்பொருளில் வினைபுரியும். இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது சல்பர் (கந்தகம்) எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய்நாற்றத்துக்கு மூலகாரணம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பற்களில் காரை படிவது, பல்ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய்நாற்றத்தை வரவேற்கின்ற காரணிகள். வாய்ப் புண், வாய்ப் புற்றுநோய், 'சிபிலிஸ்' எனும் பால்வினைநோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் நோய் போன்றவையும் வாய்நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.

மேலும், மூக்கில் சதை வளர்வது (Nasal polyp), அந்நியப் பொருள்கள் மாட்டிக்கொள்வது, சைனஸ் அழற்சி (Sinusitis), தொண்டைப் புண், தொண்டைச் சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ் (Lung abscess), நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம்.  இவை தவிர, உணவுக்குழாய் அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய நோய்களின்போதும் வாய்நாற்றம் உண்டாவதுண்டு.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பல் வலி தீர என்ன வழி?

கு.கணேசன் 12 Jun 2022

என்ன சிகிச்சை?

வாய்நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் 'ஸ்கேலிங்' முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய்நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, எண்டோஸ்கோப்பி ( Endoscopy ) பரிசோதனை ஆகியவற்றால் மற்ற காரணங்களையும் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

தடுப்பது எப்படி?

வாய்நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல்ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். பதிலாக, மிருதுவான பல்துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது.

அடுத்து, சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொருமுறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய்நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டபின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி பற்களைக் குத்தும்போது, குச்சி பல்ஈறுகளில் பட்டு புண் உண்டாக்கிவிடும் இது வாய்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். எனவே, பல்குச்சிகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் அல்லது இதற்கென்றே உள்ள பல்துலக்கி வயர்களைப் பயன்படுத்த வேண்டும். 

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

செயற்கைப் பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி, அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.

பல் மற்றும் ஈறுகளின் நலனைக் கெடுக்கின்ற புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Dec 2023

செயற்கை மணமூட்டிகள் தேவையா?

நேர்முகப்பேட்டிக்குச் செல்லும்போதும் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. ஆகையால் இவற்றுக்குப் பதிலாக, இலவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் ஒதுக்கிக்கொண்டால் வாய் மணக்கும்.

வாய் உலரும் பிரச்சினை

வயது ஆக ஆக பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய்நாற்றத்துக்கு வழிவிடும். இந்த நிலைமையைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தர்ப்பூசணி போன்ற தண்ணீர்ச்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிட்டு வந்தால் வாய் உலராது. மேலும், வாயை உலர வைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடும்போது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வதும் முக்கியம்.

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தச் சர்க்கரையை சரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதிக தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போது வாய் அடிக்கடி உலர்ந்துவிடும். இதன் விளைவால், பல் ஈறுகள் கெட்டு வாய் நாற்றம் ஏற்பட வழி உண்டாகும்.

மவுத் வாஷ் பயன் தருமா?

வாய்நாற்றத்தைப் போக்க, புத்துணர்வை உண்டாக்க என்று பல்வேறு ‘மவுத் வாஷ்’ திரவங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும்போது பல் மருத்துவரின் ஆலோசனையுடன் சிறிது காலம் பயன்படுத்துவதே நல்லது. காரணம், மவுத் வாஷைப் பயன்படுத்தும்போது தீமை தருகின்ற பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கின்ற நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மயக்கம் வருவது ஏன்?

கு.கணேசன் 07 Jan 2024

‘ஃபிளாஸ்ஸிங்’ உதவும்!

பல் துலக்கியால் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்கு பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குள்ள உணவுத்துகள்தான் நம் எதிரி! இதை முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம். பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூலை’ வாங்கி, இரு பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி, மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத்துகள், கரை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். இதன் பலனால், வாய்நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
களைப்பு ஏற்படுவது ஏன்?
மயக்கம் வருவது ஏன்?
பல் வலி தீர என்ன வழி?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4






பெரியார்: அவர் ஏன் பெரியார்?மாநில அதிகார வரம்புகாங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்வாசகர்கள் கடிதம்தேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?குடும்பப் பெயர்மஞ்சள் நிற தலைப்பாகைவாக்குச்சாவடிஉள்ளடக்கங்கள் மாற வேண்டும்காதல் திருமணங்கள்சாதியம்எரிச்சல்சாவர்க்கர் பெரியார் காந்திசேதுராமன்ஸ்ரீசங்கராச்சாரியார்க.சுவாமிநாதன்தகவல் தொடர்புத் துறைசமதா யுவஜன் சபா (எஸ்ஒய்எஸ்)வருவாய்ஜாட் சமூகம்திருநம்பிகள்மதச்சார்பின்மைஆணாதிக்கத்தின் சின்னம்ராஜாஜி விடுத்த எச்சரிக்கைரொமான்ஸ்அகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?நேரு படேல் விவகாரம்உள்ளூர்த்தன்மைமுன்னோடி மாநிலம்முதல் சட்டமன்ற உறுப்பினர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!