கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: கமல்நாத்

வ.ரங்காசாரி
22 Nov 2023, 5:00 am
0

முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.

க்தி வாய்ந்த பாஜகவின் சிவராஜ் சிங் சௌகானுக்கு, மத்திய பிரதேசத்தில் இப்போது சிம்ம சொப்பனமாக இருப்பவர் கமல்நாத். மூன்று முறை முதல்வராக மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியை வலுவாக சௌகான் வைத்திருந்தபோதிலும், காங்கிரஸ் இன்னமும் மாநிலத்தில் உயிர்ப்போடு இருந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள முக்கியமான காரணம், கமல்நாத்.

டெல்லிதான் கமல்நாத்தின் அரசியல் களம். மத்திய பிரதேசத்தின் காங்கி சிந்த்வாரா மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமல்நாத். மனிதர் கணிசமான நாட்கள் டெல்லியிலேயே இருப்பார் என்றாலும், மாநிலத்தில் கட்சி நடவடிக்கைகளில் எப்போதும் உத்வேகமாக இருப்பது கமல்நாத்துடைய சிறப்பம்சம். 

காங்கிரஸின் இந்துத்துவ பதிலடிக்காரர்

இன்றைய காங்கிரஸ் பாஜகவின் இந்துத்துவத்தை எதிர்கொள்வதில் இரு பாதைகளைக் கையாள்கிறது. 1. மதச்சார்பின்மையின் பெயரால் பாஜகவின் இந்துத்துவச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பதும் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுவதும். 2. எல்லா மதங்களையும் நாங்கள் சமமாகப் பாவிக்கிறோம் என்று பாஜகவின் இந்துத்துவச் செயல்பாடுகளுக்கு எல்லாம் போட்டியாக நிற்பதும், கூடவே மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுவதும். கமல்நாத் இரண்டாவது பாதையைப் பின்பற்றுபவர். மாநிலத்தில் மட்டும் அல்லாது, நாடு முழுவதும் காங்கிரஸ் இந்தப் பாதையிலேயே செல்ல வேண்டும் என்று வலியுறுத்துபவர்.

ராகுலைக் கோயில் கோயிலாக அழைத்துச் சென்றவர் கமல்நாத். பசு காப்பகங்கள் போன்ற பாஜகவின் திட்டங்களை காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்தவர். கமல்நாத்துடைய சொந்த தொகுதியான சிந்த்வாராவில் அனுமார் கோயில் கட்டியிருக்கிறார் கமல்நாத். 

இவையெல்லாம் மென்போக்கு இந்துத்துவம் இல்லையா என்று கேட்டால், கமல்நாத் பதில் இதுதான். ‘நான் எப்போதும் ஒரு பக்தி மிகுந்த இந்து. அதேசமயம், நான் மதச்சார்பற்றவன். இந்த நாடும் அப்படித்தான். எல்லா வழிபாட்டிடங்களுக்கும் நான் செல்கிறேன். ஆனால், நான் இந்து கோயில்களுக்குச் சென்றால் மட்டும் பாஜக அலறுகிறது. அப்படி பாஜக அலறும் என்றால், நான் மேலும் மேலும் அலற வைக்கத்தானே வேண்டும்?’

வளர்ந்த பின்னணி

மகேந்திர நாத் – லீலா இணையரின் மகனாக உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் 18.11.1946இல் பிறந்தவர் கமல்நாத். பிராமணர். திரைப்பட விநியோகம், திரைப்படம் திரையிடல், புத்தகப் பதிப்பாளர், வியாபாரம் என்று தொழில் செய்தவர் கமல்நாத்துடைய தந்தை. டேராடூனில் உள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்தார் கமல்நாத். அப்போது சஞ்சய் காந்தியும் அங்கு படித்ததால் நேரு-இந்திரா குடும்பத்தாருடன் சிறுவயது முதலே நட்பு வளர்ந்தது.

பிறகு கொல்கத்தா நகரின் புனித ஸ்டீபன் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்பாவுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார். அனிதா, ரீட்டா என்று இரு சகோதரிகள். கமல்நாத்துக்கு 1973இல் திருமணம் ஆனாது. மனைவி அல்கா. இந்த இணையருக்கு நகுல்நாத், வகுள்நாத் என்று இரண்டு மகன்கள். கமல்நாத்தின் மனைவி அல்காவும் மக்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது மகன் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அரசியல் நுழைவு

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் 1968ஆம் ஆண்டு உறுப்பினராகச் சேர்ந்தார் கமல்நாத். உத்தர பிரதேசத்திலிருந்து குடும்பம் மத்திய பிரதேசத்துக்குக் குடிபெயர்ந்தது. 1979இல் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த இந்திரா காந்தி பொதுக்கூட்ட மேடையிலேயே கமல்நாத்தைத் தன்னுடைய மூன்றாவது மகன் என்று குறிப்பிட்டார்.

சிறந்த பேச்சாளரும் துறுதுறுப்பான செயல்பாட்டாளருமான கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். 1980இல் ஏழாவது மக்களவைக்கு சிந்த்வாராவிலிருந்து காங்கிரஸ் சார்பில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அத்தொகுதியிலிருந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997இல் நடந்த இடைத் தேர்தலில் மட்டும் பாஜக இங்கு வென்றது பிறகு மீண்டும் கமல்நாத்தே தொடர்ந்து வெற்றிபெற்றார்.

தொகுதியில் மக்களின் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற கமல்நாத் முக்கியக் காரணம். அந்தத் தொகுதிகளில் 5 பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கான தனித்தொகுதிகள் என்பது சிறப்பு.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி

வ.ரங்காசாரி 16 Nov 2023

வகித்த பதவிகள்

ஒன்பது முறை மக்களவை உறுப்பினர், ஆறு துறைகளுக்கு மத்திய அமைச்சர் என்பதோடு, 17.12.2018 முதல் 20.03.2020 வரையில் மத்திய பிரதேச முதல்வராகப் பதவி என்று நிர்வாக அனுபவமும் நிறைந்தவர். கான்பூரில் பிறந்ததால் உத்தர பிரதேசக்காரர், கல்கத்தாவில் படித்ததால் வங்காளி, டெல்லிக்குப் போய்விடுவார் என்று பிரச்சாரம் நடக்கிறது. ‘அதெல்லாம் உப்புசப்பில்லாத வாதம்; அப்படியென்றால், மோடிக்கு உத்தர பிரதேசத்தில் என்ன வேலை என்று பாஜக விளக்க வேண்டும்’ என்கிறார்.

காங்கிரஸுக்குள் உள்ள கோஷ்டி தலைவலியையும் வெற்றிகரமாகக் கையாள்கிறார் கமல்நாத். திக்விஜய் சிங் இன்னமும் செல்வாக்கோடுதான் திகழ்கிறார் என்றாலும், இரு தேர்தல்களாக கமல்நாத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது தேசிய தலைமை.

காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி 2018 பொதுத் தேர்தலில் வெற்றிபெற வைத்த கமல்நாத்தால் பெரும்பான்மை வலுவைப் பெற வைக்க முடியவில்லை. பெரும்பான்மைக்கு 2 தொகுதிகள் குறைவாக இருந்தாலும் பகுஜன் சமாஜ் போன்ற சிறிய கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் கமல்நாத்.

கமல்நாத்துடைய வெற்றியையும் ஆட்சியையும் ஜீரணிக்க முடியாத பாஜகவுக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கட்சித் தலைமையுடன் இருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரை பதவி விலக வைத்து, ஆட்சிக்கு இருந்த பெரும்பான்மை வலுவைப் பறித்து ஆட்சியைக் கவிழ்த்தது. உடனே சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்தது.

இந்தத் துரோகத்தை மாநில காங்கிரஸ் தொண்டர்களும் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களும் மறக்கவில்லை. இதைத்தான் பிரியங்கா காந்தி சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தின்போது மேடையிலேயே சுட்டிக்காட்டினார். “ஜோதிர் ஆதித்ய உயரத்தில் குறைந்தவர், பொறாமையில் மிகப் பெரியவர், அவர்களுடைய (ராஜ) குடும்பத்துக்கே உரிய துரோக குணத்தைக் காங்கிரஸிடமும் காட்டிவிட்டார்” என்றார்.

ஒன்றிய அரசில் 1991இல் சுற்றுச்சூழல், வனவளத் துறைகளுக்கு தனிப் பொறுப்பு இணை அமைச்சராக பதவி வகித்தார் கமல்நாத். பிறகு 1995-96இல் ஜவுளித் துறை இணை அமைச்சராக தனிப் பொறுப்பு வகித்தார். 2001 முதல் 2004 வரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2004இல் வணிகம், தொழில் துறை அமைச்சரானார். 2009-11இல் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம் ஆகிய துறைகளுக்கும் காபினட் அமைச்சராகப் பதவி வகித்தார்.

எடுபடாத குற்றச்சாட்டுகள்

மாநிலத்தின் 10 பெரிய பணக்கார அரசியலர்களில் கமல்நாத்தும் ஒருவர், அவருடைய குடும்ப சொத்துகளின் மதிப்பு ரூ.134 கோடி என்று ஓர் அமைப்பு தெரிவித்துள்ளது. மனை வணிகம், விமானப் போக்குவரத்து, மலை வணிகப் பயிர் தோட்டங்கள், விருந்தோம்பல் துறை என்று பலவற்றையும் மகன்கள் நகுல், வகுள் நிர்வகிக்கின்றனர்.

மேலும், 2018இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கக் காரணமாக இருந்தாலும் பேரவைத் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை. எனவே, முதல்வராகப் பதவியேற்ற பிறகு 2019இல் இடைத் தேர்தலில் நின்று பேரவை உறுப்பினரானார். ஆட்சிக் கவிழ்க்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இப்போது மீண்டும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார், அவருக்கு எதிராக விவேக் பண்டி சாஹு என்பவரைக் களம் இறக்கியிருக்கிறது பாஜக.

தனக்கு எதிராக 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கமல்நாத்தே வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

கமல்நாத் 2007இல் வணிகத் துறை அமைச்சராக இருந்தபோது பாசுமதி அல்லாத ரக அரிசியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி தந்தார். அதை அரசுத் துறை நிறுவனத்தைவிட தனியார் துறை நிறுவனங்கள் மூலம் அதிகம் ஏற்றுமதி செய்ய வழிசெய்து, பணம் பெற்றார் என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தில்லியில் பெரிய கலவரம் நடந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் அங்கும் பிற வட இந்திய நகரங்களிலும் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தில் கமல்நாத் மீதும் சீக்கியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதை விசாரித்த நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையம்; ஆனாலும், இந்தக் கறை கமல்நாத் மீது இன்றும் நீடிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்

வ.ரங்காசாரி 17 Nov 2023

பெரும் சவால் 

காங்கிரஸ் கட்சி இந்த முறை உறுதியாக மாநிலத்தை வென்றுவிட முடியும் என்று நம்புகிறது. ஆனாலும், தேசியத் தலைமை தேர்தல் வெற்றியோடு இந்த மாநிலத்தை மறந்துவிட முடியாது. மாநிலத்தின் முக்கியமான தலைவர்களான திக் விஜய் சிங், கமல்நாத் இருவருக்குமே 75 வயதுக்கு மேல் ஆகிறது. அடுத்த தலைமுறைக்கான தலைவரை இங்கே உருவாக்கியாக வேண்டும். மோடிக்கு மட்டும் அல்லாது சித்தாந்தரீதியாக பாஜகவுக்கும் நல்ல செல்வாக்குள்ள மாநிலம் இது. காங்கிரஸ் தனக்கான கதையாடலை உருவாக்க வேண்டும். முக்கியமாக, கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தியாக வேண்டும்.

2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் ஓட்டு வங்கியை 36% என்பதிலிருந்து 41% என்பதாகவும், 58 இடங்கள் என்பதிலிருந்து 114 என்பதாகவும் உயர்த்தி ஆட்சியைப் பிடிக்க முடிந்த கமல்நாத்தால், 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 40 தொகுதிகளில் மூன்றை மட்டுமே வெல்ல முடிந்தது; 37 இடங்களை பாஜக வென்றது. இதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. கமல்நாத் முன்னுள்ள பெரும் சவால், வரவிருக்கும் காலகட்டத்துக்குள் இந்த ஓட்டையை அடைப்பதுதான்!  

 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி
மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


2






லாபமின்மைசோஷலிஸ அரசியல்ஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைமாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறுரோமப் பேரரசுரத யாத்திரைசெல்வாக்கை இழந்த ஜான்சன்டெல்லி பல்கலைக்கழகம்இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!மாற்றம் விரும்பிகளுக்கும்கலைப் படைப்புகல்சுரல் காபிடல்அரசமைப்புச் சட்டப்பிரிவு 159அதிகாரப்பரவல்தண்டிக்கப்படாத செயல்கள்ச.ச.சிவசங்கர் பேட்டிசமஸ் அருஞ்சொல் சென்னை புத்தகக்காட்சிநீட் தேர்வுஉத்தாலகர்உடல் எடை ஏன் ஏறுகிறது?கருணாநிதிதிருநாவுக்கரசர் பேட்டிமனப்பான்மைகால் வீக்கம்ஆளுநரை நீக்குவது தேசிய விவாதம் ஆகட்டும்கர்நாடக உயர் நீதிமன்றம்குஜராத் - பில்கிஸ் பானுசட்டத்தின் கொடுங்கோன்மைஓ சொல்றியா மாமாஆசிரியரிடமிருந்து

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!