கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

சங்க இலக்கிய இசைக் கச்சேரி

பெருமாள்முருகன்
22 Jul 2023, 5:00 am
0

ர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுடன் என் பயணம் 2016ஆம் ஆண்டு  தொடங்கியது. செவ்விசை உலகிற்குள் என்னை இப்படி இழுத்துவிடுவார் என்று அப்போது நினைக்கவில்லை. இசை கேட்பதைத் தவிர வேறெந்த வகையும் அறியாத, இசை நுட்பம் தெரியாத என்னைக் கீர்த்தனைகள் எழுத வைத்தார். அவற்றைக் கச்சேரிகளில் தொடர்ந்து பாடினார். பல பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

‘நீ மட்டுமே என் நெஞ்சில் நிற்கிறாய்’ என்னும் காபி ராகப் பாடல் மிகப் பிரபலம் ஆயிற்று. கேரளத்து நாட்டியக்காரர்கள் பலர் அப்பாடலுக்கு ஆடினர். அப்பாடலை மறுஆக்கம் செய்தோரும் உண்டு. அம்பேத்கார், பெரியார் குறித்த பாடல்களை வெளியிட்டபோது பல எதிர்வினைகள் வந்தன. கையால் மலம் அள்ளும் தொழிலாளர் குறித்து எழுதிய ‘கைகள் மலம் அள்ளலாமா?’ பாடல் பரவலாயிற்று.

பஞ்ச பூதக் கீர்த்தனைகள் என்றும் பறவைகள் பற்றியவை என்றும் எழுதியவை குறிப்பாகச் சூழல் ஆர்வலர்கள் கவனத்தை ஈர்த்தன. கருத்துரிமை பற்றி எழுதியச் ‘சுதந்திரம் வேண்டும்’ பாடல் சமீபமாக ரசிகர் விருப்பம் ஆகியிருக்கிறது. 

கீர்த்தனை இலக்கியம்

தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றவன் என்பதாலும் சொந்த ஆர்வத்தாலும் யாப்பிலக்கணம் ஓரளவு அறிவேன். மரபுக் கவிதை எழுதும் பயிற்சியும் உண்டு. யாப்பிலக்கணம் அறிந்தோர் படைப்பாற்றலும் கொண்டிருந்தால் மரபில் எளிதாக எழுத முடியும். கீர்த்தனை இலக்கியம் பற்றி அறிவும் சிறிதுண்டு. தமிழ் இலக்கிய வகைமையில் ‘கீர்த்தனை இலக்கியம்’ என்பதும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகுந்திருந்த இலக்கிய வகை. ‘தமிழ் இசை இலக்கிய வரலாறு’ எழுதிய மு.அருணாசலம் தமிழ்க் கீர்த்தனை இலக்கிய வரலாற்றைப் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துத் தாண்டவரிடம் தொடங்குகிறார். 

முத்துத் தாண்டவர் எழுதியனவாக இன்று அறுபது கீர்த்தனைகள் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக ஆராய்ச்சி செய்யும் மு.அருணாசலம் பிறகாலத்துச் சாகித்தகர்த்தாக்கள் பலருக்கு முன்னோடியாக முத்துத் தாண்டவர் அமைவதை எடுத்து விளக்குகிறார். தனிக் கீர்த்தனை வகை பின்னர், குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், புராணக் கதைகளையும் காப்பியங்களையும் முழுமையாகக் கீர்த்தனை வடிவத்தில் எழுதும் முறையில் வளர்ச்சி பெற்றிருப்பதையும் காண முடிகிறது. ‘இராமநாடகக் கீர்த்தனை’, ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ ஆகியவை மிகவும் பிரபலம். 

மகாபாரதக் கதை முழுவதையும் கீர்த்தனை வடிவில் எழுதியுள்ளனர். 1855ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ‘மகாபாரதக் கீர்த்தனை’ நூலை இரா.சீனிவாசன், க.வினாயகம் ஆகியோர் இணைந்து இப்போது பதிப்பித்துள்ளனர். ‘பாரத நாடகம்’ என்றும் இது வழங்கப்பட்டிருக்கிறது. அந்நூலின் பயன்பாடு பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதிலிருந்து எத்தனை பாடல்கள் பாடப்பட்டன என்பதும் தெரியவில்லை. 1905ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பதிப்பை ஆதாரமாக வைத்து இப்போதைய பதிப்பை உருவாக்கியுள்ளனர்.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

கதாகாலட்சேபம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்த்து கலை வடிவங்களில் கீர்த்தனைகள் ஓரளவுக்கேனும் பாடப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் ‘கீர்த்தனை இலக்கியம்’ எனத் தனிப்படுத்திச் சொல்லும் வகைமையே உருவாகியுள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முறையிலும் சற்றே வேறுபட்ட வடிவங்களிலும் அமைந்த கீர்த்தனை இலக்கியத்தை ஓரளவு வாசித்திருக்கிறேன். உ.வே.சாமிநாதையர் எழுதிய நூல்களில் ஆங்காங்கே கீர்த்தனைகளைப் பற்றி எழுதிச் செல்வதையும் படித்திருக்கிறேன். 

மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உள்ளிட்டோர் குரல்களில் கீர்த்தனைகளைக் கேட்டு வந்திருக்கிறேன். யாப்பிலக்கணத்தில் அசையும் இசையில் தாளமும் இயைபவை. இவை என் மனதில் இருந்தமையாலும் சிறுவயதில் நாடகப் பாடல்கள் எழுதிய அனுபவத்தாலும் கீர்த்தனை வடிவத்தில் பெரிய சிரமமில்லாமல் எழுத முடிந்தது. தாளம் இடிக்கும் இடங்களை எடுத்துக்காட்டிச் சரிசெய்ய டி.எம்.கிருஷ்ணாவின் உதவி எப்போதும் கிடைக்கும். செவ்வியல் இசைக்குள் ஒரு ‘சாகித்திய கர்த்தா’வாக என் பயணம் இப்படித்தான் நடந்தது. 

நானும் கிருஷ்ணாவும்

நான் எழுதியவற்றை மட்டும் பாடும்படியான கச்சேரிகள் சிலவற்றை டி.எம்.கிருஷ்ணா செய்தார். அப்படி ஒரு கச்சேரியை சங்கீதா சிவக்குமாரும் நடத்தினார். கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றில் மேடையேறிக் கீர்த்தனை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அனேகமாக எனக்கு மட்டும்தான் கிட்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கரோனோ முடக்க காலத்தில் பாடலைப் பற்றி நான் பேச, கிருஷ்ணா பாடத் தனித்தனியாக யூடியூபில் இருபது பாடல்கள் வெளியாயின. அதுவும் புதியதோர் அனுபவம். 

இப்படிக் கிட்டத்தட்ட ஐம்பது கீர்த்தனைகள் எழுதிவிட்ட நிலையில் இவற்றை எல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த திருச்சியைச் சேர்ந்த நண்பர் க.காசிமாரியப்பன் “சங்க இலக்கியப் பாடல்களை வைத்துக் கீர்த்தனைகள் எழுதுங்களேன். செவ்வியல் இலக்கியத்தைச் செவ்வியல் இசைக்குள் கொண்டுசெல்வது நன்றாக இருக்கும்” என்று ஒருமுறை சொன்னார். இதுபோலச் செயல்திட்டங்களைக் கொடுப்பதில் வல்லவராகிய அவர் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிச் சில காலம் யோசித்துக்கொண்டிருந்தேன். கிருஷ்ணாவிடம் இதைப் பற்றிப் பேசியபோது உற்சாகமானார். ‘பெரிய நிகழ்ச்சியாக வைத்துப் பாடிவிடுவோம்’ என்றார். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மாட்டில் ஒலிக்கும் தாளம்

டி.எம்.கிருஷ்ணா 23 Jan 2022

சங்க இலக்கியக் கீர்த்தனை

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய சங்க இலக்கியம், தமிழைச் செம்மொழி என்று போற்றுவதற்கான ஆதாரச் சான்று. தமிழ் இலக்கண நெறிகளைப் பாதுகாத்து ஏற்றிவந்த கால வாகனம். அகம், புறம் என்னும் பாடுபொருள்களால் அழகு நுட்பம் செறியப் பாடிய பாடல்களைக் கொண்ட பேரிலக்கியம். திணை என்னும் இலக்கியக் கோட்பாட்டின் விளைச்சல். தமிழர் பண்பாட்டின் தனித்தன்மைகளை உட்பொதிந்து வைத்திருக்கும் கருவூலம். தமிழக வரலாற்றுக்கான பல்வேறு தரவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் புதையல். மானிடவியல், தொல்லியல் உள்ளிட்ட எத்தனையோ துறை சார்ந்த ஆய்வுகளுக்கு அடித்தளம். 

பெருஞ்சிறப்பு மிக்க சங்க இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு கீர்த்தனை எழுதும் துணிவு எங்கிருந்து வந்தது? மாணவனாகவும் ஆசிரியனாகவும் கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலம் தொடர்ந்து வந்த கற்றல்தான் அத்துணிவைக் கொடுத்தது. கீர்த்தனை எழுதும் நோக்கத்தில் மீண்டும் ஒருமுறை பருந்துப் பார்வையில் சங்க இலக்கியத்தைப் பார்த்தேன். அகத்திற்கு ஐந்து பாட்டு; பாடுபொருள் அகம், அதாவது காதல். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் ஒவ்வொன்று. 

முதல், கரு, உரி என்னும் முப்பொருள்களால் ஆனது அகம். அவை அமையும்படி கீர்த்தனை வடிவத்தின் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவற்றை வகுத்துக்கொண்டேன். பல்லவிக்கு ஒரு கவிதையின் முத்தாய்ப்பு முடிவு போதுமானது. அதன் கோணத்தையும் பின்புலத்தையும் விளக்க அனுபல்லவியைப் பயன்படுத்தினேன். முதற்பொருளும் கருப்பொருளுமாகிய இயற்கைப் பின்னணியை விவரிக்கச் சரணம் பொருத்தமாக இருந்தது. ஒவ்வொரு திணைக்குமான கீர்த்தனையை உருவாக்க அத்திணை சார்ந்த வெவ்வேறு கவிதைகள் உதவின. 

திருச்சியில் கச்சேரி

சங்க இலக்கிய அகப்பாடல்கள் முழுவதும் கூற்று முறையில் அமைந்தவை. கவிஞர் கூற்றாக வரும் பாடல் ஏதுமில்லை. பாடல் விவரிக்கும் நிகழ்வோடு தொடர்புடைய கதாபாத்திரம் ஒன்று பேசுவதாக அமைவது கூற்று. ஒருபாடலில் ஒற்றைக் குரல்தான் ஒலிக்கும் எனினும் முன்னிலையின் சொற்களும் படர்க்கையின் பார்வைகளும் வந்து சேரும்படி பாடலை அமைப்பது கவிஞர் திறன். அவ்வகையில் முக்கியமான பாத்திரங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் தலைவி / தலைவன், தலைவி, தலைவன், தோழி, கண்டோர் ஆகியோர் கூற்றுக்களைக் கீர்த்தனையில் அமைத்தேன். இன்று வரை வழங்கும் சங்க இலக்கியச் சொற்களை அப்படியே கையாண்டேன். பழந்தமிழ்ச் சொற்களை முழுமையாக விட மனதில்லை. அதேசமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும்படி எளிதாக்க முயன்றுள்ளேன்.

பல்வேறு பாடுபொருள்களாய் விரிந்து கிடக்கும் புறத்திலிருந்து ஐந்து பாட்டு. புறத்தில் பாடல்களைத் தேர்வுசெய்வது அத்தனை எளிதல்ல. வகைமாதிரியாகப் பாடல்களைத் தேர்வுசெய்வது கடினம். அதனால் எனக்குப் பிடித்த பாடல்களாகவும் புறத்தின் விரிவைக் காட்டக்கூடிய வகையிலும் தேர்ந்தேன்.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலை விட முடியுமா? கையறுநிலை இல்லாமல் புறமேது? மன்னர் சிறப்பு, கைக்கிளை, கல்வி ஆகியவற்றுக்கு ஒவ்வொன்று. மிகுந்த நிதானத்தோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எடுத்துக்கொண்டு இப்பாடல்களை உருவாக்கினேன். 

டி.எம்.கிருஷ்ணாவும் அவரது குழுவினரும் இணைந்து இப்பாடல்களுக்குக் கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் மெட்டமைத்திருக்கிறார்கள். திருச்சியில் செயல்பட்டுவரும் இலக்கிய அமைப்பு ‘களம்’. அதன் அமைப்பாளர்களுள் ஒருவராகிய நண்பர் துளசிதாசன் அவர்களுடன் இம்முயற்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘களம் சார்பாகத் திருச்சியில் அரங்கேற்றம் செய்துவிடலாம்’ என்று உற்சாகம் காட்டினார். களம் அமைப்பின் ஏற்பாட்டில் 29 ஜூலை 2023 அன்று சங்க இலக்கியக் கீர்த்தனைகள் இசை அரங்கேற உள்ளன. 

கீர்த்தனை வடிவில் சங்க இலக்கியம்

சங்க இலக்கியச் செய்யுள்களைக் கீர்த்தனையாக்கும் முயற்சி புதிதல்ல. பாரதிதாசன் இம்முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் இசைப்பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். தேனருவி, இசையமுது 1, 2 ஆகிய நூல்கள் முழுமையாக அவரது இசைப் பாடல்களைக் கொண்டவை.  1956இல் அவர் வெளியிட்ட ‘தேனருவி’ நூல் முன்னுரையில் ‘அகம் புறம் பற்றிய பழந்தமிழ்ச் செய்யுட்களின் உரையாக அமைந்த பாட்டுக்கள் பல இதில் காணப்படும்’ (ப.5) என்று கூறுகிறார். 

நூலில் ‘துறைப் பாடல்கள்’ என்னும் தலைப்பில் பதினெட்டுப் பாடல்கள் உள்ளன. அவை அகம், புறம் இரண்டிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களை எளிமைப்படுத்தி இசைப் பாடலாக்கியவை. ‘இசையமுது தொகுதி 2’இல் நான்கு பாடல்கள் உள்ளன. சங்கச் செய்யுள்களை எளிமையாக்கி இருபதுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைப் பாரதிதாசன் எழுதியுள்ளார். இப்பாடல்கள் எவையேனும் இசை நிகழ்ச்சிகளில் அக்காலத்தில் பாடப்பட்டனவா என்னும் தகவலைத் தேடி அறிய வேண்டும். இவ்வகையில் பாரதிதாசன் எழுதிய வேறு பாடல்கள் அவரது பிற நூல்களில் உள்ளனவா என்றும் தேடிக் காண வேண்டும். 

பாரதிதாசன் தவிரப் பிற கவிஞர்கள் இத்தகைய முயற்சியைச் செய்திருக்கிறார்களா என்றும் பார்க்கலாம். இத்தேடல் புதிய தகவல்களையும் பார்வையையும் வழங்கக்கூடும். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து சங்க இலக்கியம் நமக்கு வந்து சேர்ந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.  தமிழ் இலக்கண மரபிற்குச் சான்றாகத் திகழும் செய்யுள்கள் இந்நூலில் இருப்பதால் உரையாசிரியர்கள் தொடர்ந்து மேற்கோள் காட்டிவந்துள்ளனர். அகம், புறம் என்னும் திணை இலக்கியக் கோட்பாடு நம் இலக்கிய மரபில் இன்று வரைக்கும் செல்வாக்குச் செலுத்துகிறது. அதன் மூலவடிவம் சங்க இலக்கியம். அதன் தாக்கத்தை எல்லாக் காலத்திலும் காணலாம். 

இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டதாகக் கம்பன் எழுதியது களவுக்குப் (காதலுக்குப்) பிறகே திருமணம் என்னும் தமிழ் அகப்பொருள் மரபைத் தழுவித்தான். மேற்கோள்கள், உரைகள், விளக்கங்கள், நயநூல்கள், ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என்றெல்லாம் விதவிதமான வடிவங்களில் சங்க இலக்கியம் அடுத்தடுத்த தலைமுறையைச் சென்று சேர்ந்துகொண்டே இருக்கிறது. அதேபோலக் கீர்த்தனை வடிவத்திலும் சங்க இலக்கியத்தை எழுதுவது முக்கியமானது. 

கீர்த்தனை

ஒருமுறை காதில் கேட்டாலும் எப்போதும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் இசையில் சங்க இலக்கியம் இடம்பெற வேண்டும். அது இசை ரசனையை மட்டுமல்ல, இலக்கிய ரசனையையும் மேம்படுத்தும். ஆகவே எழுத்தோடு நின்றுவிடாமல் இசைக் கச்சேரிகளில் தொடர்ந்து சங்க இலக்கியத்தைப் பாட வேண்டும். டி.எம்.கிருஷ்ணாவின் இந்த இசைக் கச்சேரி அவ்வகையில் முதன்மையான முன்னெடுப்பு என்று சொல்லலாம். 

சங்க இலக்கியக் கீர்த்தனைகளில் இருந்து சான்றுக்கு ஒன்று: 

இரங்கல் (நெய்தல்): தோழி கூற்று

பல்லவி

இப்போது வந்து சேர்வார் – அவர்
இப்போது வந்து சேர்வார் 
இமைதீய்க்கும் கண்ணீர் தாங்கி
முப்போதும் நினைத்து வருந்தி

மனம்சோர்ந்து வாடும் தோழீ                        (இப்போது)

அனுபல்லவி 

உப்பங்கழிகளில் நெய்தல் பூக்களை 
உயரவாரிக் கொண்டு சேர்க்கும்
தப்பாதஅலை யோசை கேட்டுத்
தனித்திருக்குமுன் துயரம் தீர                         (இப்போது)

சரணம்

வெப்பம் தணிந்து வேதனை இருள்படர
வெய்யோன் மலையில் மறையும் மருள்மாலை
அப்பும் குளிரை அணைத்து எடுத்தெடுத்தே
அழிக்கும் எமனாய் அடிக்கும் ஊதைக் காற்று
சொப்பிய கொழுமீன் சேர்த்துண்டு நீர்நாய்
தூங்கும் கானல் சேர்ப்பனைப் பிரிந்தினிமேல்
எப்படி வாழ்வேன் எனப்புலம்பும் தோழீ
இத்துயர் போக்கும் இன்ப முருகெனவே              (இப்போது)

 

ஆதாரப் பாடல்கள்: குறுந்தொகை, பாடல் எண்கள்:  4, 55, 177, 195, 197; நற்றிணை, பாடல் எண்கள்: 111, 145.

குறிப்பு: பாரதிதாசன் எழுதிய கீர்த்தனைகளைப் பற்றிக் கூறி அவற்றில் கவனம் செலுத்தக் காரணமான நண்பர் முனைவர் ய.மணிகண்டன். அவருக்கு நன்றி.

 

பயன்பட்ட நூல்கள்: 

1. மு.அருணாசலம், தமிழ் இசை இலக்கிய வரலாறு, 2009, கடவுப் பதிப்பகம், மதுரை.
2. இரா.சீனிவாசன், க.வினாயகம் (ப.ஆ.), மகாபாரதக் கீர்த்தனை, 2016, நெய்தல் பதிப்பகம், சென்னை.
3. பாரதிதாசன், தேனருவி, 1956, தேனருவிப் பதிப்பகம், சென்னை.
4. பாரதிதாசன், இசையமுது இரண்டாம் பகுதி, 1952, பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி.

 

தொடர்புடைய கட்டுரைகள்

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
மாட்டில் ஒலிக்கும் தாளம்
அப்துல் காதிரும் தியாகராய கீர்த்தனைகளும்
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை
ஹார்மோனியத்தின் கதை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1






பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்பொருளாதாரக் கொள்கைகள்ஜாட் சமூகம்ரத்தச் சர்க்கரைஇந்தியாவின் குரல்கள்அஸ்ஸாம்தூய்மையான நகரம்மரிவாலாஇந்திய தேசிய காங்கிரஸ்ஷெஹான் கருணாதிலகநடிப்புத் துறைஆறு விதிகள்எழுத்தாளர் கி.ரா. கடினமான காலங்கள்சுயவிமர்சனம்செல்வந்தர்களின் இந்தியாஇயன்முறை சிகிச்சைபோன் பேஈர்ப்புக்குழாய்மாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிமகாதேவர் கோயில்உடல் எடைக் குறைப்புக்கான வழிகள்தனித் தொகுதிகள்பாலினச் சமத்துவம்ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்மனித உரிமை மீறல்கள்டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?பண்டைய வரலாறுடாக்டர் ஆர்.மகாலிங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!